February 19, 2026

அபுதாபியில் அமைதிப் பேச்சுவார்த்தை: கீவ் (Kyiv) நகரில் ஏவுகணை மழை – ரஷ்யாவின் இரட்டை முகம்!

அபுதாபி/கீவ், ஜனவரி 24, 2026: ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் ரஷ்யா, உக்ரைன் மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த அதே வேளையில், உக்ரைன் தலைநகர் கீவ் (Kyiv) மீது ரஷ்யா இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. “பேச்சுவார்த்தை மேசையிலேயே குண்டு வீசப்பட்டது போன்றது” என உக்ரைன் இந்தத் தாக்குதலை வர்ணித்துள்ளது உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு மற்றும் சனிக்கிழமை அதிகாலையில் (ஜனவரி 24), ரஷ்யா உக்ரைன் மீது மிகக் கடுமையான வான்வழித் தாக்குதலைத் தொடுத்தது. உக்ரைன் விமானப்படையின் தகவலின்படி, சுமார் 370 ஆளில்லா ட்ரோன்கள் (Drones) மற்றும் 21 அதிநவீன ஏவுகணைகள் தலைநகர் கீவ் மற்றும் பிற முக்கிய நகரங்களை நோக்கி ஏவப்பட்டன. இந்தத் தாக்குதலால் கீவ் நகரின் முக்கிய மின் உற்பத்தி நிலையங்கள் கடுமையாகச் சேதமடைந்தன. கடும் குளிர்காலத்தில், சுமார் 12 லட்சம் வீடுகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கின. மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் மீதும் ஏவுகணைகள் விழுந்து வெடித்ததில் பலர் படுகாயமடைந்துள்ளனர். இது போரின் நான்கு ஆண்டுகளில் தலைநகர் கீவ் சந்தித்த மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்தத் தாக்குதல் நடப்பதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்புதான், அபுதாபியில் மும்முனைப் பேச்சுவார்த்தை தொடங்கியது. இதில்:

  • ரஷ்யா தரப்பில்: ராணுவப் உளவுத்துறையான ஜி.ஆர்.யூ (GRU) தலைவர் ஜெனரல் இகோர் கோஸ்ட்யுகோவ் (Igor Kostyukov),
  • உக்ரைன் தரப்பில்: பாதுகாப்புத் துறை அமைச்சர் ருஸ்டெம் உமெரோவ் (Rustem Umerov),
  • அமெரிக்கா தரப்பில்: அதிபர் டிரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff) மற்றும் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் (Jared Kushner) ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தப் பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கம் போரை முடிவுக்குக் கொண்டுவருவதாகும். குறிப்பாக, ரஷ்யா ஆக்கிரமித்துள்ள ‘டான்பாஸ்’ (Donbas) பிராந்தியத்தை உக்ரைன் விட்டுக்கொடுக்க வேண்டும் என ரஷ்யா பிடிவாதம் பிடிக்கிறது. ஆனால், தனது இறையாண்மையை விட்டுக்கொடுக்க உக்ரைன் மறுத்து வருகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தை நடக்கும்போதே ரஷ்யா தாக்குதல் நடத்தியது, அமைதி முயற்சியில் ரஷ்யாவுக்கு உண்மையான அக்கறை உள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

தாக்குதல் குறித்துக் கருத்து தெரிவித்த உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா (Andrii Sybiha), “புதின் தனது ஏவுகணைகளை உக்ரைன் மக்கள் மீது மட்டும் வீசவில்லை; அபுதாபியில் உள்ள பேச்சுவார்த்தை மேஜையின் மீதே வீசியுள்ளார்,” என்று ஆவேசமாகக் கூறினார். பேச்சுவார்த்தையில் தனது கை ஓங்கியிருக்க வேண்டும் என்பதற்காகவே ரஷ்யா இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தியிருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்கத் தரப்பு இந்தப் பேச்சுவார்த்தை “ஆக்கப்பூர்வமாக” (Constructive) இருந்ததாகக் கூறினாலும், எந்தவிதமான இறுதி ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை. ரஷ்யா தனது ராணுவ பலத்தைக் காட்டி மிரட்டிப் பணியவைக்க முயல்கிறது என்பது தெளிவாகிறது. பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டம் பிப்ரவரி 1-ம் தேதி மீண்டும் அபுதாபியில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே நேரத்தில் “அமைதிப் பேச்சு” மற்றும் “போர்” ஆகிய இரண்டையும் கையில் எடுப்பது ரஷ்யாவின் ராஜதந்திர உத்தியாகப் பார்க்கப்படுகிறது. குளிர்காலத்தில் மின்சாரத்தைத் துண்டிப்பதன் மூலம் உக்ரைன் மக்களைச் சோர்வடையச் செய்து, அதன் மூலம் அரசைப் பணிணிய வைப்பதே ரஷ்யாவின் திட்டம்.

மேலதிக செய்திகள்