April 14, 2026

இஸ்ரேலின் கோரத் தாக்குதல்: லெபனானுக்காகக் குரல் கொடுக்கும் கனடா! பொருளாதாரத் தடைகளுக்கு மறுப்பு

மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள மிக உக்கிரமான வான்வழித் தாக்குதல்கள் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. இந்த விவகாரத்தில் கனடா தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ள போதிலும், இஸ்ரேலுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் என்ற பேச்சுக்கே இடமில்லை எனத் தற்காப்பு ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது.

ராஜதந்திர கயிற்றில் நடக்கும் கனடா

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளின் தலையீட்டில், பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து ஒரு தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. இது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

கனடாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் அனிதா ஆனந்த் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், கடந்த புதன்கிழமை அன்று லெபனானின் தலைநகர் பெய்ரூட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ளார். “அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவதையும், வாழ்வாதார உள்கட்டமைப்புகள் சிதைக்கப்படுவதையும் ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது” என அவர் சீறியுள்ளார்.

அதே சமயம், ஒரு சமநிலையான போக்கைக் கடைப்பிடிக்கும் விதமாக, ஹிஸ்புல்லா அமைப்பின் செயல்பாடுகளையும் அவர் விமர்சித்துள்ளார். அந்த அமைப்பு உடனடியாக ஆயுதங்களைக் கைவிட்டு, லெபனான் அரசின் இறையாண்மைக்குக் கட்டுப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


“தடைகள் இப்போதைக்கு இல்லை” – பிரதமர் மார்க் கார்னி திட்டவட்டம்

கியூபெக் மாகாணத்தின் கான்ட்ரெக்கர் (Contrecoeur) நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த கனடா பிரதமர் மார்க் கார்னி , லெபனான் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்றார்.

“போர் நிறுத்தம் என்பது காகிதத்தில் மட்டும் இருக்கக்கூடாது; அது லெபனான் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் எதார்த்தமாக அரங்கேற வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு,” என்று கார்னி குறிப்பிட்டார்.

இருப்பினும், இஸ்ரேல் மீது பொருளாதார ரீதியான அழுத்தம் கொடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, “அத்தகைய நடவடிக்கை எதுவும் தற்போது ஆலோசனையில் இல்லை” என்று அவர் மழுப்பலாகப் பதிலளித்தார். கனடா அரசின் இந்த மென்மையான அணுகுமுறைக்கு பின்னணியில் அமெரிக்காவின் அழுத்தம் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த விவகாரத்தில் எடுக்கும் முடிவைப் பொறுத்தே கனடாவின் அடுத்தகட்ட நகர்வுகள் அமையும் என அந்நாட்டு அரசின் மூத்த அதிகாரி ஒருவர் சிபிசி நியூஸ் (CBC News)நிறுவனத்திடம் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.


“கருப்பு புதன்”: லெபனானில் ஒரு கோரத் தாண்டவம்

கடந்த மார்ச் 2-ஆம் தேதி இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியதிலிருந்து, ஏப்ரல் 8 அன்று நடந்த தாக்குதலே மிக மோசமான இரத்தக் களரியாகப் பார்க்கப்படுகிறது. அல் ஜசீரா (Al Jazeera) செய்திகளின்படி, இஸ்ரேல் வெறும் 10 நிமிட இடைவெளியில் 50 போர் விமானங்களைக் கொண்டு ஹிஸ்புல்லாவின் 100-க்கும் மேற்பட்ட இடங்களைச் சிதைத்துள்ளது.

இந்தக் கோரத் தாக்குதலில்:

  • 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.
  • 1,000-க்கும் அதிகமானோர் படுகாயம்.

லெபனான் மக்கள் இந்தத் துயரமான நாளை “கருப்பு புதன்” (Black Wednesday) என்று கண்ணீருடன் அழைக்கின்றனர். லெபனான் அதிபர் இந்தத் தாக்குதலை “மிருகத்தனமானது” என்று சாடியுள்ளார்.

மறுபுறம், சர்வதேச அழுத்தம் காரணமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu)பேச்சுவார்த்தைக்குத் தயாராகுமாறு தனது அமைச்சரவைக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால், “ஹிஸ்புல்லாவிற்கு எதிரான வேட்டை தொடரும்” என்ற அவரது பிடிவாதம், அந்தப் பிராந்தியத்தில் அமைதி திரும்புமா என்ற கேள்வியைக் குறியாக்கயுள்ளது.

மேலதிக செய்திகள்