February 19, 2026

கொலைக்களமான அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணம்! அமெரிகாக படையினரால் இரண்டாவது கொலை

மின்னசோட்டா, ஜனவரி 24, 2026: அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலம் இன்று மீண்டும் ஒருமுறை ரத்தத்தால் கறைபடிந்துள்ளது. ஏற்கனவே ஒரு மரணத்தின் வடு ஆறுவதற்குள், இன்று மீண்டும் ஒரு அமெரிக்கக் குடிமகன் குடியேற்ற அமலாக்கத் துறை (ICE) அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஒரே மாதத்தில் நடக்கும் இரண்டாவது சம்பவம் இது என்பதால், புலம்பெயர் சமூகங்களும் மனித உரிமை ஆர்வலர்களும் கடும் அச்சத்திலும் கோபத்திலும் ஆழ்ந்துள்ளனர்.

மின்னசோட்டாவின் மினியாபோலிஸ் (Minneapolis) நகரில், தெற்கு நிக்கோலெட் அவென்யூ (Nicollet Avenue) பகுதியில் இன்று காலை இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. கொல்லப்பட்டவர் அலெக்ஸ் ஜெஃப்ரி பிரெட்டி (Alex Jeffrey Pretti – 37) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஒரு தீவிர சிகிச்சை பிரிவு (ICU) செவிலியர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேரில் பார்த்தவர்கள் மற்றும் வெளியான வீடியோ காட்சிகளின்படி, அலெக்ஸ் தனது கையில் ஆயுதம் ஏதும் இல்லாத நிலையில், தனது அலைபேசியில் காட்சிகளைப் பதிவு செய்துகொண்டிருந்ததாகத் தெரிகிறது. ஆனால், ICE அதிகாரிகள் அவரைத் தரையில் தள்ளி, அவர் அசைவற்று இருக்கும்போதும் சுட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. “அவர் ஒரு செவிலியர், உயிரைக் காப்பாற்றுபவர்; இன்று அவருடைய உயிரே அதிகாரவர்க்கத்தால் பறிக்கப்பட்டுள்ளது,” என அங்கிருந்த மக்கள் கண்ணீருடன் கதறினர்.

தொடரும் சோகம்: இரண்டாவது பலி 

இந்தச் சம்பவம் மின்னசோட்டா மக்களை அதிகம் உலுக்கியதற்குக் காரணம், இது தனிப்பட்ட சம்பவம் அல்ல. கடந்த ஜனவரி 7-ம் தேதிதான், ரெனீ நிக்கோல் குட் (Renee Nicole Good) என்ற 37 வயதுடைய மூன்று குழந்தைகளின் தாய், இதே ICE அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தப் படுகொலைக்கு நீதி கேட்டுப் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் வேளையிலேயே, இன்று மற்றொரு உயிர் பறிபோயிருப்பது “அதிகார அத்துமீறலின் உச்சம்” என விமர்சிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் அரசியல் ரீதியாகவும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. மின்னசோட்டா ஆளுநர் டிம் வால்ஸ் (Tim Walz), “மின்னசோட்டா இதற்கு மேல் பொறுத்துக்கொள்ளாது. இது ஒரு அருவருப்பான செயல் (Absolute abomination),” என்று கடுமையாகச் சாடியுள்ளார். மேலும், மத்திய அரசின் இந்தப் படைகளை உடனடியாக மாநிலத்தை விட்டு வெளியேறுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மறுபுறம், அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS), கொல்லப்பட்ட அலெக்ஸ் கையில் துப்பாக்கி இருந்ததாகவும், அதிகாரிகள் தற்காப்புக்காகவே சுட்டதாகவும் வாதிடுகின்றனர். ஆனால், அலெக்ஸ் சட்டப்பூர்வமாக ஆயுதம் வைத்திருக்க அனுமதி பெற்றவர் என்பதும், அவர் அதிகாரிகளைத் தாக்க முற்படவில்லை என்பதும் அவரது குடும்பத்தினரின் வாதமாக உள்ளது.

கீழே இணைக்கப்பட்டுள்ள காணொளி, துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறைச் சம்பவங்கள் அடங்கிய மிகவும் அதிர்ச்சியூட்டும் காட்சிகளைக் (Graphic Content) கொண்டுள்ளது. இது சிலருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பார்வையாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு (Viewer Discretion Advised)கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலதிக செய்திகள்