வாஷிங்டன் | 31 ஜனவரி 2026: ஈரான் மீதான இராணுவத் தாக்குதல் அச்சுறுத்தல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஈரான் தற்போது அமெரிக்காவுடன் “பேச்சுவார்த்தையில்” ஈடுபட்டுள்ளதாகவும், ஒரு பெரிய மோதலைத் தவிர்ப்பதற்கான ஒப்பந்தம் ஒன்று எட்டப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ‘தி கார்டியன்’ (The Guardian) வெளியிட்டுள்ள செய்தியின்படி, வாஷிங்டனில் ஊடகவியலாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “ஈரான் எங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறது, எங்களால் எதையாவது செய்ய முடியுமா என்று பார்ப்போம்… இல்லையெனில் என்ன நடக்கும் என்று பார்ப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பானது, ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட ஒடுக்குமுறைகளுக்குப் பதிலடியாக, ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மற்றும் இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் நிலவி வரும் சூழலில் வெளியாகியுள்ளது. “ஈரானியர்கள் பேச்சுவார்த்தை மேசைக்கு வர வேண்டும், இல்லையெனில் அவர்கள் மிக மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என ட்ரம்ப் ஏற்கனவே எச்சரித்திருந்தார். தற்போது ஈரான் தனது நிலைப்பாட்டைத் தளர்த்தியுள்ளதாகத் தோன்றுவது ஒரு இராஜதந்திர மாற்றமாகக் கருதப்படுகிறது.
அமெரிக்காவின் இந்த நகர்வுக்கு வலுசேர்க்கும் வகையில், ‘USS Abraham Lincoln’ விமானம் தாங்கிக் கப்பல் தலைமையிலான பிரம்மாண்டமான போர்க்கப்பல் படை (Armada) தற்போது ஈரானிய கடற்பரப்பை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. இதனை ஒரு “பெரிய கடற்படை” என்று வர்ணித்துள்ள ட்ரம்ப், ஈரானியத் தலைமை ஒரு ஒப்பந்தத்திற்கு வர விரும்புவதற்குக் காரணம் அமெரிக்காவின் இந்த இராணுவ அழுத்தம் தான் என நம்புகிறார். குறிப்பாக, ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் ஏவுகணைத் திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதையே ட்ரம்ப் தனது முக்கிய இலக்காகக் கொண்டுள்ளார்.
மறுபுறம், ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி (Abbas Araghchi), துருக்கி மற்றும் ஓமன் போன்ற நாடுகளின் மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று சமிிக்ஞை காட்டியுள்ளார். இருப்பினும், ஈரானின் ஏவுகணை மற்றும் பாதுகாப்புத் திறன்கள் ஒருபோதும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்படாது என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது. “சமமான மற்றும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார், அதேவேளைப் போருக்கும் நாங்கள் தயார்” என்று அரக்ச்சி இஸ்தான்புல்லில் வைத்துத் தெரிவித்துள்ளார்.
ஈரானில் அண்மையில் நடந்த போராட்டங்களில் சுமார் 6,000 பேர் வரை கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்த ஒடுக்குமுறைக்குப் பின்னர், ஈரானியத் தலைமை மீதான சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ளது. ஈரானில் தற்போது மரணதண்டனைகள் நிறுத்தப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள ட்ரம்ப், இது ஈரான் இணங்கி வருவதற்கான ஒரு அடையாளம் எனக் கருதுகிறார். எவ்வாறாயினும், ஈரானின் பிராந்திய நட்பு நாடுகளான ஹிஸ்புல்லா மற்றும் ஹூதி அமைப்புகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதும் அமெரிக்காவின் நிபந்தனைகளில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பகுதியில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளுக்குத் தனது இராணுவத் திட்டங்கள் குறித்துத் தெரிவிக்கப்படவில்லை என ட்ரம்ப் கூறியுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த இரகசியம் காக்கப்படுவதாக அவர் விளக்கியுள்ளார். ஈரானுடனான இந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்தால், அது மத்திய கிழக்கில் ஒரு பெரிய போரைத் தவிர்க்க உதவும். ஆனால், இரு தரப்பினருக்கும் இடையிலான அடிப்படை முரண்பாடுகள் இன்னும் தீர்க்கப்படாத நிலையில், இந்த ஒப்பந்தம் சாத்தியமாகுமா என்பது வரும் வாரங்களில் தான் தெரியவரும்.









