February 19, 2026

கொலைச் சதி மற்றும் குற்றக் கும்பலுடன் கைகோர்த்த 8 காவல்துறை அதிகாரிகள் கைது: டொராண்டோ காவல்துறை வரலாற்றில் பாரிய ஊழல்

ஒட்டாவா/டொராண்டோ, பிப்ரவரி 05, 2026: டொராண்டோ காவல்துறை சேவையின் (Toronto Police Service) நம்பகத்தன்மையை உலுக்கும் வகையில், ‘Project South’ என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட ஏழு மாத கால இரகசிய விசாரணையின் முடிவில், ஏழு தற்போதைய அதிகாரிகள் மற்றும் ஒரு ஓய்வுபெற்ற அதிகாரி உட்பட மொத்தம் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். York Regional Police (YRP) தலைமை தாங்கிய இந்த விசாரணையில், காவல்துறை அதிகாரிகள் ஓழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுடன் (Organized Crime Groups) இணைந்து கொலை முயற்சி, போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் போன்ற அதிர்ச்சியூட்டும் குற்றங்களில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.

இந்த வழக்கின் தொடக்கப்புள்ளி 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் தேதி அன்று அமைந்தது. York Region பகுதியில் வசிக்கும் ஒன்ராறியோ சிறைச்சாலை அதிகாரி ஒருவரைப் படுகொலை செய்ய மூன்று முகமூடி அணிந்த நபர்கள் முயன்றனர். அவர்கள் துப்பாக்கிகளுடன் குறித்த அதிகாரியின் வீட்டை முற்றுகையிட்டபோது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறை வாகனத்தின் மீது மோதித் தப்பிச் செல்ல முயன்றனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், பாதிக்கப்பட்ட சிறைச்சாலை அதிகாரியின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வீட்டு முகவரி ஆகியவை டொராண்டோ காவல்துறையின் இரகசியத் தரவுத்தளத்திலிருந்து கசியவிடப்பட்டது கண்டறியப்பட்டது.

இந்த ஊழலின் மையப்புள்ளியாக 12-வது காவல் பிரிவைச் சேர்ந்த கான்ஸ்டபிள் Timothy Barnhardt (56) அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மீது கொலைச் சதி, 17 வெவ்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இவர் Brian Da Costa என்பவரால் வழிநடத்தப்பட்ட ஒரு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் நேரடித் தொடர்பில் இருந்துள்ளார். டொராண்டோ காவல்துறையின் தரவுத்தளத்தைப் பயன்படுத்தி, அந்த கும்பலுக்குத் தேவையான தனிநபர்களின் தகவல்களை Barnhardt வழங்கியதாகவும், அதற்குப் பதிலாக அவர் பெரும் தொகையைக் கையூட்டாகப் பெற்றதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவல்களைப் பயன்படுத்தி, குறித்த குற்றக் கும்பல் குறைந்தது ஏழு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மற்றும் பல கொள்ளைச் சம்பவங்களை அரங்கேற்றியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மற்ற அதிகாரிகளில் முக்கியமானவர்கள் கான்ஸ்டபிள் Saurabjit Bedi மற்றும் சார்ஜென்ட்கள் Robert Black, Carl Grellette ஆகியோர் ஆவர். இவர்கள் சட்டவிரோத கஞ்சா விற்பனை நிலையங்களுக்கு (Illegal Cannabis Dispensaries) எதிரான சோதனைகளைத் தடுத்து, அவற்றுக்குப் பாதுகாப்பு வழங்க லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது. மேலும், கான்ஸ்டபிள் Derek McCormick என்பவர் 52-வது காவல் பிரிவிலிருந்து பாஸ்போர்ட்டுகள், ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் வங்கி அட்டைகளைத் திருடி அவற்றை கறுப்புச் சந்தையில் விற்பனை செய்ததற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். இது ஒரு காவல் துறையினருக்குரிய நேர்மையை முற்றிலும் மீறிய செயலாகும்.

இந்த வழக்கில் மற்றுமொரு அதிர்ச்சிகரமான அம்சம், தந்தை மற்றும் மகனான John Madeley Sr. மற்றும் John Madeley Jr. ஆகியோரின் கைது ஆகும். தந்தை ஜான் மேட்லி மூத்தவர் 29 ஆண்டுகள் பணியாற்றி 2025 ஏப்ரலில் ஓய்வுபெற்றவர். இவரது மகன் ஜான் மேட்லி இளையவர் தற்போது பணியில் உள்ளவர். இவர்கள் இருவரும் இணைந்து இரகசியத் தகவல்களைக் குற்றவாளிகளுக்குக் கசியவிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பல மட்டங்களில் பரவியிருந்த இந்த ஊழல் வலைப்பின்னலைத் தகர்க்க 300-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் களமிறக்கப்பட்டதாக York Regional Police துணைத் தலைவர் Ryan Hogan தெரிவித்துள்ளார்.

டொராண்டோ காவல்துறைத் தலைவர் Myron Demkiw இந்தச் சம்பவம் குறித்துப் பேசுகையில், “இது காவல்துறையின் அடிப்படை நம்பிக்கையையே தகர்க்கும் செயல்” என்று வேதனையுடன் குறிப்பிட்டார். குற்றம் சுமத்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்; அவர்களில் நால்வருக்குச் சம்பளம் வழங்கப்படமாட்டாது என்றும் அவர் அறிவித்தார். டொராண்டோ மேயர் Olivia Chow மற்றும் ஒன்ராறியோ மாகாண அரசு ஆகியவை இந்த விவகாரத்தில் உயர்மட்டச் சுயாதீன விசாரணைக்கு (Independent External Inspection) உத்தரவிட்டுள்ளன. காவல்துறை அமைப்பிற்குள் இத்தகைய ஊழல்கள் ஊடுருவியிருப்பது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வரை இந்த விசாரணையில் 169 பவுண்டுகள் கஞ்சா மற்றும் ஒரு பவுண்டுக்கும் அதிகமான பெண்டானில் (Fentanyl) போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை ஐரோப்பிய நாடுகளுக்குக் கடத்தப்படவிருந்தவை எனத் தெரியவந்துள்ளது. Project South விசாரணை இன்னும் முடிவடையவில்லை என்றும், மேலதிக ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு கனேடிய சட்ட வரலாற்றில் காவல்துறையினருக்கு எதிரான ஒரு மிக முக்கியமான விசாரணையாகக் கருதப்படுகிறது.

மேலதிக செய்திகள்