February 19, 2026

Tumbler Ridge துப்பாக்கிச் சூடு: நிரந்தரமாக மூடப்படும் பாடசாலை வளாகம் – பிரதமர் மார்க் கார்னி மற்றும் தலைவர்கள் உருக்கமான அஞ்சலி

ஒட்டாவா | 15 பெப்ரவரி 2026: கனடாவின் British Columbia மாகாணத்தில் உள்ள Tumbler Ridge Secondary School இல் அண்மையில் அரங்கேறிய கோரமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்தப் பாடசாலை வளாகத்திற்கு மாணவர்கள் இனி ஒருபோதும் திரும்பப்போவதில்லை என Global TV செய்தி வெளியிட்டுள்ளது. 18 வயதுடைய ஜெஸ்ஸி வான் ரூட்சலர் (Jesse Van Rootselaar) எனும் மாணவியால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ஒரு ஆசிரியர் மற்றும் ஐந்து மாணவர்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர். இந்தத் தளம் தற்போது ஒரு துயரத்தின் குறியீடாக மாறியுள்ளதால், அங்கு மீண்டும் வகுப்புகளை நடத்துவது மாணவர்களின் மனநிலையைப் பாதிக்கும் எனக் கருதி, பாடசாலையை நிரந்தரமாக மூடிவிட்டு புதிய இடத்தைத் தேட மாகாண அரசு தீர்மானித்துள்ளது.

இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்காக நேற்று நடைபெற்ற பிரம்மாண்டமான நினைவு அஞ்சலி கூட்டத்தில், கனடியப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) கலந்துகொண்டு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். பிரதமர் மார்க் கார்னி, இந்தச் சம்பவத்தைத் தேசத்திற்கு நேர்ந்த ஒரு “பேரிழப்பு” எனக் குறிப்பிட்டார். “கனடாவின் அமைதியான சமூகக் கட்டமைப்பின் மீது விழுந்த பலத்த அடி இது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து நீண்டகால உதவிகளையும் மத்திய அரசாங்கம் தடையின்றி வழங்கும்” என அவர் உறுதியளித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே (Pierre Poilievre) இந்த அஞ்சலி கூட்டத்தில் கலந்துகொண்டு மிகவும் உருக்கமான முறையில் உரையாற்றினார். உயிரிழந்த மாணவர்களின் நினைவாக “If Tomorrow Starts Without Me”என்ற புகழ்பெற்ற கவிதையை அவர் வாசித்த போது அரங்கமே கண்ணீரில் நனைந்தது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் துப்பாக்கிக் கலாச்சாரம் குறித்து அவர் தனது கவலையை வெளியிட்டதுடன், இத்தகைய வன்முறைகள் மீண்டும் நிகழாமல் தடுக்க அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

இந்தத் துயரமான தருணத்தில், கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கரி ஆனந்தசங்கரி நேரடியாக Tumbler Ridge பகுதிக்குச் சென்று நிலைமைகளை நேரில் ஆய்வு செய்தார். அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடிய அவர், பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய தேசியப் பாதுகாப்பு விதிமுறைகள் (Security Protocols) உடனடியாக அமுல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார். குறிப்பாக, மனநலப் பாதிப்பு உள்ளவர்கள் துப்பாக்கிகளை அணுகுவதைக் கட்டுப்படுத்த கடுமையான சட்ட மாற்றங்கள் கொண்டுவரப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் கல்வியைத் தொடர மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. Tumbler Ridge நகர பிதா டேரில் கிரகோவ்கா (Darryl Krakowka) கருத்துத் தெரிவிக்கையில், இந்தச் சிறிய சமூகம் ஒரு பெரிய குடும்பத்தைப் போல ஒன்றுபட்டு இந்தத் துயரத்திலிருந்து மீண்டு வரும் எனத் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குத் தேவையான உளவியல் ஆலோசனைகளை வழங்க மாகாண கல்வி அமைச்சு விசேட நிபுணர்களை அனுப்பியுள்ளது.

மேலதிக செய்திகள்