ஏப்ரல் 14, 2026: கனடாவில் திங்கட்கிழமை நடைபெற்ற முக்கியமான இடைத்தேர்தல்களில் ஆளும் லிபரல் கட்சி (Liberal Party) அனைத்து இடங்களையும் கைப்பற்றி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. கடந்த ஒரு ஆண்டாக சிறுபான்மை அரசாங்கத்தை வழிநடத்தி வந்த பிரதமர் Mark Carney, இந்த வெற்றியின் மூலம் 343 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் (House of Commons) அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில், முன்னாள் வங்கி ஆளுநரான Mark Carney தலைமையில் லிபரல் கட்சி ஆட்சியமைத்தாலும், பெரும்பான்மைக்குத் தேவையான 172 இடங்களை எட்ட முடியாமல் தவித்து வந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக எதிர்க்கட்சிகளிலிருந்து ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் லிபரல் கட்சிக்குத் தாவியதும், தற்போது நடைபெற்று முடிந்த மூன்று இடைத்தேர்தல்களில் கிடைத்த வெற்றியும் மார்க் கார்னியின் கரங்களை வலுப்படுத்தியுள்ளது. குறிப்பாக, ரொறன்ரோவின் இரண்டு தொகுதிகளிலும் மொன்றியலின் (Montreal) ஒரு புறநகர்ப் பகுதியிலும் லிபரல் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளதாக CBC News அறிவித்துள்ளது.
இந்த பெரும்பான்மை பலமானது, பிரதமர் மார்க் கார்னி தனது சட்டமன்றத் திட்டங்களை எவ்விதத் தடையுமின்றி நிறைவேற்ற வழிவகுக்கும். குறிப்பாக, கனடா அமெரிக்காவின் மீதான தனது பொருளாதாரச் சார்புநிலையைக் குறைப்பதையும், வர்த்தக விவகாரங்களில் அமெரிக்க அதிபர் Donald Trump-க்கு இணையாக வலுவான நிலையில் நின்று பேச்சுவார்த்தை நடத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளார். சனிக்கிழமை மொன்றியலில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் உரையாற்றிய அவர், “இது அற்பமான அரசியல் வேறுபாடுகளுக்கான நேரமல்ல; ஒற்றுமையுடன் நாம் ஒரு வலிமையான கனடாவைக் கட்டியெழுப்புவோம்” என்று உணர்ச்சிப்பூர்வமாகத் தெரிவித்தார்.
மறுபுறம், இந்தத் தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சித் தலைவர் Pierre Poilievre-க்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே கடந்த பொதுத்தேர்தலில் தனது சொந்தத் தொகுதியிலேயே தோல்வியைத் தழுவி, பின்னர் இடைத்தேர்தல் மூலம் நாடாளுமன்றம் வந்த அவருக்கு, தற்போது அவரது கட்சியிலிருந்து உறுப்பினர்கள் வெளியேறியது பலவீனத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்சர்வேட்டிவ் (Conservative) கட்சியிலிருந்து வெளியேறிய Chris d’Entremont போன்ற உறுப்பினர்கள், போய்லியேரின் ஆக்ரோஷமான மற்றும் அதீத கட்சி சார்ந்த அரசியல் அணுகுமுறையே தங்கள் விலகலுக்குக் காரணம் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
நாடாளுமன்றக் குழுக்களின் மீதான கட்டுப்பாட்டை இனி லிபரல் கட்சி முழுமையாகப் பெறும் என்பதால், பிணைச் சீர்திருத்தம், இணையப் பாதுகாப்பு மற்றும் எல்லைப் பாதுகாப்பு போன்ற நிலுவையில் உள்ள முக்கிய மசோதாக்கள் விரைவாக நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது. முன்னதாக எதிர்க்கட்சிகள் இக்குழுக்களைப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுத்து வந்த நிலையில், இனி மார்க் கார்னி எவ்வித சமரசமுமின்றித் தனது கொள்கைகளை முன்னெடுக்க முடியும். இது புலம்பெயர் சமூகத்தினரின் பாதுகாப்பு மற்றும் குடியேற்றக் கொள்கைகளிலும் சில மாற்றங்களைக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி, கனடிய மக்களிடையே மார்க் கார்னியின் செல்வாக்கு கணிசமாக உயர்ந்துள்ளது. சமீபத்திய Nanos கருத்துக்கணிப்பின்படி, 54 சதவீத மக்கள் மார்க் கார்னியைப் பிரதமராகத் தொடர விரும்புவதாகவும், 23 சதவீத மக்கள் மட்டுமே Pierre Poilievre-க்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. குறிப்பாகத் தமிழ் மக்கள் அதிகம் வாழும் நகரப்புறங்களில் லிபரல் கட்சியின் நிதானமான மற்றும் நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை இந்தத் தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன.









