April 21, 2026

ஈரான் – அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தையில் இழுபறி தொடர்கின்றது!


இஸ்லாமாபாத், ஏப்ரல் 19, 2026 — ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான தொடர் பெச்சுவார்த்தைதகளில் தொடர்ந்தும் இழுபறிநிலை காணப்பட்டு வருகின்றது. அமெரிக்கா ஈரானிய துறைமுகங்கள் மீதான தனது கடற்படை முற்றுகையை தொடர்ந்து வருகின்றது. ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை அமலில் இருக்கும் வரைஇ பாகிஸ்தானுக்கு மீண்டும் தனது பேச்சுவார்த்தைக் குழுவை அனுப்புவதா என்பது குறித்து தாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று ஈரானிய அரச தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த முட்டுக்கட்டையானது ஏப்ரல் 11-12 தேதிகளில் இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் ஏற்பாடு செய்த முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ளது. சுமார் 21 மணிநேரம் நீடித்த அந்தப் பேச்சுவார்த்தை உடன்பாடு ஏதுமின்றி முடிவடைந்தது. அமெரிக்கா விதித்த நிபந்தனைகளை ஏற்க ஈரான் மறுத்துவிட்டது.

முன்னேற்றத்தைத் தடுக்கும் காரணிகள்

ஈரான் தனது அணுசக்தி முன்னெடுப்புக்களை முற்றாகக் கைவிடவேண்டும், ஹர்மூஸ் நீரிணையூடான தடையற்ற போக்குவரத்து என்பன அமெரிக்காவினால் வைக்கப்பட்ட நிபந்தனைகளாகும்.இரு தரப்பினரும் ஒரு கட்டமைப்பை எட்டுவதற்கு மிக நெருக்கமாக இருந்தபோதிலும், முக்கிய விவகாரங்களில் நிலவும் கருத்து வேறுபாடுகள் மற்றும் முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களின் விடுவிக்கப்பட வேண்டிய அளவு குறித்த மோதலால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக ராய்ட்டர்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா தனது துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை நீக்குவதே அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளுக்கான நிபந்தனை என்று ஈரான் கூறியுள்ளதுடன் இது போர்நிறுத்தத்தை மீறும் செயல் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதற்கு மாறாக தாங்கள் நியாயமானதாகக் கருதும் ஒப்பந்தத்தை ஈரான் ஏற்கும் வரை மற்றும் அணு ஆயுதப் பாதையை கைவிடும் வரை முற்றுகை தொடரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

போர்நிறுத்த அழுத்தம்

பேச்சுவார்த்தைகளுக்கான வாய்ப்பை உருவாக்கிய இரண்டு வார கால போர்நிறுத்தமே ராஜதந்திர நடவடிக்கைகளை இயக்கும் முக்கிய காலக்கெடுவாக உள்ளது. இருநாடுகளிற்கும் இடையில் உள்ள ராஜதந்திர நடுவர்கள் இந்த கால எல்லையை நீட்டிக்க முயற்சி செய்து வருகின்றனர். போர்நிறுத்தத்தை நீடிக்க கொள்கை அளவில் ஒரு புரிதல் ஏற்பட்டுள்ளதாக பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அமெரிக்க அதிகாரிகள் முறையான நீடிப்பை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

பாகிஸ்தான் தொடர்ந்து முக்கிய நடுவராக செயல்பட்டு வருகிறது. போர்நிறுத்தம் நீடிக்கப்பட்டால் இரு தரப்பும் மீண்டும் இஸ்லாமாபாத் திரும்ப வாய்ப்புள்ளதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் மற்றொரு தூதுக்குழுவை அனுப்ப ஈரான் மறுப்பதாலும் அமெரிக்கா தனது ராணுவ நிலைப்பாட்டைத் தளர்த்தாததாலும் தூதரக முயற்சிகள் தற்போது நூல் இழையில் தொங்கிக் கொண்டிருக்கின்றன.

மேலதிக செய்திகள்