கனடா

  • “அமெரிக்காவின் அடுத்த குறி கனடாவாக இருக்கலாம்” – ஐ.நா முன்னாள் தூதர் பாப் ரே எச்சரிக்கை

    “அமெரிக்காவின் அடுத்த குறி கனடாவாக இருக்கலாம்” – ஐ.நா முன்னாள் தூதர் பாப் ரே எச்சரிக்கை

    (டொராண்டோ / வாஷிங்டன்): வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை (Nicolas Maduro) அமெரிக்கப் படைகள் அதிரடியாகக் கைது செய்துள்ள சம்பவத்தைத் தொடர்ந்து, கனடாவின் இறையாண்மைக்கும் (Sovereignty) பெரும் ஆபத்து காத்திருப்பதாகக் கனடாவிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் தூதர் பாப் ரே (Bob Rae) எச்சரித்துள்ளார். ‘குளோபல் நியூஸ்’ (Global News) ஊடகத்திற்கு அவர் வழங்கிய பிரத்தியேக செவ்வியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வெளியுறவுக் கொள்கைகள் கனடாவைப் பெரிதும் பாதிக்கக்கூடும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

    கனடாவிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் தூதர் பாப் ரே (Bob Rae)

    “கனடா மெனுவில் உள்ளது” (Canada is on the menu) 

    பாப் ரே தனது செவ்வியில் பயன்படுத்திய “Canada is on the menu” என்ற வாசகம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “உணவு மேஜையில் அடுத்ததாகப் பரிமாறப்படவிருக்கும் உணவாகக் கனடா உள்ளது” என்ற அர்த்தத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதாவது, ட்ரம்ப்பின் ஆக்கிரமிப்புப் பட்டியலில் அடுத்த இலக்காகக் கனடா இருக்கலாம் என்பதே இதன் பொருளாகும். “ட்ரம்ப் கனடாவைத் தனது 51-வது மாநிலமாக மாற்றுவேன் என்று வெளிப்படையாகச் சொல்லவில்லை என்பதற்காக நாம் நிம்மதியாக இருந்துவிட முடியாது. அவருடைய நடவடிக்கைகள் அனைத்தும் நாம் குறிவைக்கப்பட்டுள்ளோம் என்பதையே காட்டுகின்றன,” என்று பாப் ரே எச்சரித்துள்ளார்.

    வெனிசுலா சம்பவம் – ஒரு முன்னுதாரணம் 

    சமீபத்தில் வெனிசுலா ஜனாதிபதி மதுரோவை அமெரிக்கப் படைகள் கைது செய்து நாடு கடத்திய விதம், சர்வதேச சட்டங்களை அமெரிக்கா இனி மதிக்காது என்பதற்கான சான்றாகப் பார்க்கப்படுகிறது. மேற்கு அரைக்கோளத்தில் (Western Hemisphere) தனக்குக் கட்டுப்படாத எந்தவொரு நாட்டின் மீதும் படை பலத்தைப் பயன்படுத்த அமெரிக்கா தயங்காது என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. இது கனடா போன்ற நட்பு நாடுகளுக்கும் பொருந்தும் என்பதே தற்போதைய அச்சமாகும்.

    கனடாவின் வளங்கள் மீது அமெரிக்காவின் கண்? 

    ட்ரம்ப் நிர்வாகம் கிரீன்லாந்தை (Greenland) வாங்கத் துடிப்பது மற்றும் வெனிசுலாவின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்ற நினைப்பது ஆகியவற்றைப் பார்க்கும்போது, கனடாவின் இயற்கை வளங்கள் மீதும் அமெரிக்கா கண் வைத்துள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

    • ஆர்க்டிக் பிராந்தியம்: வடதுருவப் பகுதியில் கனடாவிற்குச் சொந்தமான கடல் எல்லைகள் மற்றும் கனிம வளங்கள் மீது அமெரிக்கா உரிமை கோரக்கூடும்.
    • எரிசக்தி: கனடாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையை அமெரிக்கா தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சிக்கலாம்.

    “நாங்கள் எதை வேண்டுமானாலும் செய்வோம், எங்களை யாரால் தடுக்க முடியும்?” என்ற மனநிலையிலேயே தற்போதைய அமெரிக்க நிர்வாகம் செயல்படுவதாக பாப் ரே குற்றம் சாட்டியுள்ளார். பலதரப்பு உறவுகள் (Multilateralism) மற்றும் சர்வதேச சட்டங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, “அமெரிக்கா நினைத்ததே சட்டம்” என்ற போக்கை ட்ரம்ப் கையாள்வது, கனடா போன்ற நடுத்தர வல்லரசு நாடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாகும்.

  • இலங்கையில் கனடா ஐயப்பன் ஆலய குருசாமி மீதான தாக்குதல் கனடாவிலிருந்து இயக்கப்பட்ட சதி

    இலங்கையில் கனடா ஐயப்பன் ஆலய குருசாமி மீதான தாக்குதல் கனடாவிலிருந்து இயக்கப்பட்ட சதி

    ஸ்கார்பரோ (Scarborough): கனடா ஐயப்பன் ஆலய குருசாமி திரு நாகலிங்கம் சுப்பிரமணியம் இலங்கையில் வைத்து அடித்துக் கொல்லப்படும் நிலைக்குத் தள்ளப்பட்ட சம்பவத்தின் பின்னணியில், கனடாவைச் சேர்ந்த முக்கிய நபர் ஒருவருக்குத் தொடர்பிருப்பதாக இலங்கை காவல்துறை திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. ஸ்கார்பரோ ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தின் (Scarborough Sri Ayyappan Hindu Temple) முன்னாள் தலைவர் தம்பிராஜா கந்தையா (Thambirajah Kandiah) என்பவரே இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் என இலங்கை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளதாக ‘Toronto Star’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

    கனடா ஸ்ரீ ஐயப்பன் ஆலய குருசாமி திரு நாகலிங்கம் சுப்பிரமணியம் அவர்கள்

    சம்பவத்தின் பின்னணி சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், 2023 ஆம் ஆண்டில், ஸ்கார்பரோ ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தின் குருசாமி அவர்கள் தாயகத்தில் அவரது சொந்த ஊரான அனலைதீவுக்கு சென்றிருந்த போது, அங்கே ஒரு கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டார். இந்தத் தாக்குதலில் அவர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அவர் கிட்டத்தட்ட அடித்துக் கொல்லப்படும் தருவாயில் இருந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    விசாரணையில் வெளியான தகவல்கள் இந்தக் கொலை முயற்சி வழக்கு தொடர்பாக இலங்கை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். ஏற்கெனவே நான்கு பேர் இந்த வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது ஐந்தாவது மற்றும் முக்கிய சந்தேக நபராக கனடாவில் வசிக்கும் தம்பிராஜா கந்தையா அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆலய நிர்வாகம் மற்றும் அதிகாரப் போட்டி தொடர்பான விரோதமே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

    கனடாவிலிருந்து கொண்டே, கூலிப்படையினரை ஏவி இந்தத் தாக்குதலை நடத்துவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கனடாவில் ஆலய நிர்வாகத்தில் ஏற்பட்ட பிணக்குகள், கடல் கடந்து இலங்கையில் வன்முறையாக மாறியிருப்பது புலம்பெயர் தமிழ் சமூகத்தினர் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    இலங்கையில் நடந்த குற்றச் செயலுக்கு கனடாவிலிருந்து சதித் திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படுவதால், இது இரு நாட்டு சட்டத்துறையினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பாதிக்கப்பட்டவரும், குற்றம் சாட்டப்பட்டவரும் கனேடிய பிரஜைகள் என்பதாலும் அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    புலம்பெயர் நாடுகளில் ஆன்மீக மற்றும் பொதுப் பணிகளுக்காக உருவாக்கப்படும் ஆலயங்களில், பதவிப் போட்டிகளும் அதிகார மோதல்களும் வன்முறையாக மாறுவது இது முதல் முறையல்ல. இருப்பினும், சொந்த மண்ணில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அளவுக்கு இந்த மோதல்கள் முற்றியிருப்பது கனடா வாழ் தமிழர்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • முன்னாள் துணைப் பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் அரசியலில் இருந்து விலகல்: உக்ரைன் அதிபரின் பொருளாதார ஆலோசகராகப் பொறுப்பேற்பு

    முன்னாள் துணைப் பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் அரசியலில் இருந்து விலகல்: உக்ரைன் அதிபரின் பொருளாதார ஆலோசகராகப் பொறுப்பேற்பு

    ரொறன்ரோ, கனடா (ஜனவரி 5, 2026): கனடிய அரசியலில் கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தவரும், முன்னாள் துணைப் பிரதமருமான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் (Chrystia Freeland), தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் (Volodymyr Zelenskyy) பொருளாதார ஆலோசகராகப் பொறுப்பேற்கும் அதே வேளையில், இந்த முடிவுக்குப் பின்னால் கடந்த ஓராண்டாக லிபரல் கட்சிக்குள் நடந்த அதிகாரப் போட்டிகளும், ஜஸ்டின் ட்ரூடோவுடனான (Justin Trudeau) கசப்பான மோதல்களும் முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

    உக்ரைனுக்கான புதிய பயணம் மற்றும் சர்ச்சை 

    உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, கிறிஸ்டியா ஃப்ரீலேண்டை தனது சர்வதேச பொருளாதார மேம்பாட்டுக்கான ஆலோசகராக நியமித்துள்ளதாகத் திங்கட்கிழமை அறிவித்தார். இது ஒரு ஊதியம் பெறாத, தன்னார்வப் பதவியாகும். இந்த அறிவிப்பு வெளியான கையோடு, “வரும் வாரங்களில் நான் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவேன்” என்று ஃப்ரீலேண்ட் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.

    இருப்பினும், ஒரு கனடிய எம்பி-யாக இருந்துகொண்டே வேற்று நாட்டுத் தலைவருக்கு ஆலோசனை வழங்குவது ‘முரண்பாடான நலன்’ (Conflict of Interest) என்று எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி கடும் விமர்சனங்களை முன்வைத்தது. இந்த அரசியல் அழுத்தங்களும் அவரது ராஜினாமா முடிவை விரைவுபடுத்தின. ஜூலை 2026 முதல், இங்கிலாந்தின் ரோட்ஸ் அறக்கட்டளையின் (Rhodes Trust) தலைமைச் செயல் அதிகாரியாகவும் (CEO) அவர் பொறுப்பேற்கவுள்ளார்.

    ஃப்ரீலேண்டின் கலகமும் எதிர்ப்பும் ட்ரூடோவின் வீழ்ச்சியும்

    ஃப்ரீலேண்டின் இந்த வெளியேற்றத்திற்கான விதை டிசம்பர் 2024-லேயே ஊன்றப்பட்டது. அதுவரை ஜஸ்டின் ட்ரூடோவின் வலது கரமாகச் செயல்பட்ட ஃப்ரீலேண்ட், நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள் (Fiscal Policy) தொடர்பாக ட்ரூடோவுடன் பகிரங்கமாக மோதினார். இந்த கருத்து வேறுபாடு முற்றியதில், அவர் தனது நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததுடன், ட்ரூடோவின் தலைமையை விமர்சித்து ஒரு கடுமையான கடிதத்தையும் (Scathing Letter) வெளியிட்டார். இந்தக் கலகமே ட்ரூடோவின் பதவி விலகலுக்கும், அவரது அரசியல் சகாப்தம் முடிவதற்கும் முக்கிய காரணமாக அமைந்தது.

    ட்ரூடோ விலகியதைத் தொடர்ந்து, 2025-ன் முற்பகுதியில் நடைபெற்ற லிபரல் கட்சித் தலைமைக்கான தேர்தலில் ஃப்ரீலேண்ட் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் மார்க் கார்னி (Mark Carney) களமிறங்கினார். பொருளாதார நிபுணர்கள் மற்றும் கட்சியின் மூத்தவர்களின் ஆதரவைப் பெற்ற கார்னி, அமோக வெற்றி (Landslide Victory) பெற்று கனடாவின் பிரதமரானார். இந்தத் தோல்வி ஃப்ரீலேண்டிற்கு அரசியல் ரீதியாகப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

    தேர்தலுக்குப் பின், கட்சியை ஒருங்கிணைக்கும் நோக்கில் கார்னி அவருக்குப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவியை வழங்கினார். ஆனால், முன்பு துணைப் பிரதமராக அதிகாரம் செலுத்திய அவருக்கு இது ஒரு இறக்கமாவே பார்க்கப்பட்டது. இறுதியில் அப்பதவியிலிருந்தும் விலகி, உக்ரைன் மறுசீரமைப்புக்கான சிறப்புத் தூதராக நியமிக்கப்பட்டார். தற்போது நேரடி அரசியலில் இருந்து முழுமையாக விலகும் முடிவை அவர் எடுத்துள்ளார்.

  • 2026 புத்தாண்டு: “ஒற்றுமையே பலம்” – கனடிய பிரதமர் மார்க் கார்னியின் புத்தாண்டுச் செய்தி!

    2026 புத்தாண்டு: “ஒற்றுமையே பலம்” – கனடிய பிரதமர் மார்க் கார்னியின் புத்தாண்டுச் செய்தி!

    ஒட்டாவா, ஜனவரி 01, 2026: கனடிய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), 2026-ம் ஆண்டிற்கான தனது புத்தாண்டுச் செய்தியில், கனடியர்கள் கடந்த ஆண்டில் சந்தித்த சவால்களைத் துணிவுடன் எதிர்கொண்டதைப் பாராட்டியதோடு, ஒற்றுமையே நாட்டின் மிகப்பெரிய பலம் என்று வலியுறுத்தியுள்ளார். “நாம் ஒற்றுமையாக இருக்கும்போதுதான் வலிமையாக இருக்கிறோம்; ஒருவருக்கொருவர் துணையாக நிற்பதே கனடாவை வலுவாக்குகிறது,” என்ற அவரது வார்த்தைகள், நிச்சயமற்ற உலகச் சூழலில் கனடியர்களுக்குப் புதிய நம்பிக்கையை அளிப்பதாக அமைந்துள்ளன.

    பொருளாதாரம் மற்றும் உலகளாவிய சவால்கள் முன்னாள் கனடிய வங்கி ஆளுநராகவும், இங்கிலாந்து வங்கியின் ஆளுநராகவும் (Bank of England) பணியாற்றிய அனுபவம் கொண்ட பிரதமர் கார்னி, தனது செய்தியில் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார். அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகள் மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், கனடா தனது தனித்துவமான பாதையில் உறுதியாகப் பயணிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். “நாம் சரியான பாதையில் செல்கிறோம்; அதைத் தொடர வேண்டும்,” என்ற அவரது உறுதிப்பாடு, பணவீக்கம் மற்றும் வீட்டுக்கடன் வட்டி விகிதங்களால் பாதிக்கப்பட்டிருக்கும் நடுத்தர வர்க்க மக்களுக்கு, குறிப்பாகப் புலம்பெயர் சமூகத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாகும்.

    அரசியல் புதுமுகத்தின் அசுர வளர்ச்சி மார்க் கார்னியின் இந்தப் பயணம் கனடிய அரசியலில் ஒரு அதிசயமாகப் பார்க்கப்படுகிறது. 2025-ம் ஆண்டின் தொடக்கத்தில் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியதைத் தொடர்ந்து, அரசியலில் நேரடி அனுபவம் இல்லாத ஒரு ‘புதுமுகமாக’ (Outsider) கார்னி லிபரல் கட்சியின்த் தலைமைப் போட்டிக்கு வந்தார்.ஆனால், தனது ஆழமான பொருளாதார அறிவு மற்றும் உலகளாவிய அனுபவம் காரணமாக, மார்ச் 2025-ல் நடைபெற்ற உட்கட்சித் தேர்தலில் 85 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றார்.

    தேர்தல் வெற்றி மற்றும் தலைமைப் பண்பு வெறும் கட்சித் தலைவராக மட்டுமல்லாமல், ஏப்ரல் 2025-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் லிபரல் கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போன்ற உலகத் தலைவர்களைச் சமாளிக்கக்கூடிய, பொருளாதார நுணுக்கங்களை நன்கு அறிந்த ஒரு தலைவர் கனடாவுக்குத் தேவை என்ற மக்களின் நம்பிக்கையை அவர் வென்றெடுத்தார். எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களையும் தாண்டி, ஒரு பொருளாதார நிபுணராகத் தனது பலத்தை அவர் நிரூபித்தார். மிகைப்படுத்தல்கள் அற்ற, நடைமுறைக்குச் சாத்தியமான (Pragmatic) அணுகுமுறையே அவரது வெற்றியின் ரகசியமாகக் கருதப்படுகிறது.

    2026-ம் ஆண்டு, கனடா தனது பொருளாதார மற்றும் சமூக இலக்குகளை அடையும் ஒரு முக்கிய ஆண்டாக இருக்கும் எனப் பிரதமர் மார்க் கார்னி உறுதியளித்துள்ளார். அரசியல் அனுபவம் குறைந்தவர் என்ற விமர்சனங்களைத் தவிடுபொடியாக்கி, ஒரு தீர்க்கமான தலைவராக அவர் உருவெடுத்துள்ளது கனடிய ஜனநாயகத்தின் முதிர்ச்சியைக் காட்டுகிறது.

  • வரலாறு முடிவுக்கு வருகிறது: 400 ஆண்டுகால அஞ்சல் சேவையை டென்மார்க் – கனடாவிற்கு ஒரு எச்சரிக்கை மணி!

    வரலாறு முடிவுக்கு வருகிறது: 400 ஆண்டுகால அஞ்சல் சேவையை டென்மார்க் – கனடாவிற்கு ஒரு எச்சரிக்கை மணி!

    கோபன்ஹேகன், டிசம்பர் 30, 2025: டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால், உலகின் மிகத் தொன்மையான சேவைகளில் ஒன்றான அஞ்சல் துறை தனது வரலாற்றின் இறுதி அத்தியாயத்தை எட்டியுள்ளது. ஐரோப்பிய நாடான டென்மார்க் (Denmark), தனது 400 ஆண்டுகால அரசு அஞ்சல் சேவையை இன்றுடன் (டிசம்பர் 30) முழுமையாக முடிவுக்குக் கொண்டுவருகிறது. 1624-ம் ஆண்டு மன்னர் நான்காம் கிறிஸ்டியனால் (King Christian IV) குதிரை வீரர்கள் மூலம் செய்திகளைக் கொண்டு செல்லும் அரச ஆணையாகத் தொடங்கப்பட்ட இந்தச் சேவை, நான்கு நூற்றாண்டுகளாக அந்நாட்டு மக்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்திருந்தது. இன்று நள்ளிரவுடன் டென்மார்க்கின் அரசு அஞ்சல் நிறுவனமான ‘போஸ்ட்நார்ட்’ (PostNord) தனது கடித விநியோக சேவையை நிறுத்துகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு, உலகம் முழுவதும் உள்ள அஞ்சல் துறையின் எதிர்காலம் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளதுடன், நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் கனடா போஸ்ட் (Canada Post) போன்ற நிறுவனங்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது.

    சிவப்பு பெட்டிகளின் முடிவு மற்றும் தனியார் மயம்: டென்மார்க் வீதிகளின் கலாச்சார அடையாளமாகத் திகழ்ந்த ஆயிரம் கணக்கான சிவப்பு நிற அஞ்சல் பெட்டிகள் (Red Mailboxes) கடந்த சில மாதங்களாகவே அகற்றப்பட்டு, அருங்காட்சியகங்களுக்கும் தனியாருக்கும் ஏலத்தில் விடப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் காதலர்களிடையேயான கடிதங்களையும், குடும்பங்களின் விசேஷ அழைப்பிதழ்களையும் சுமந்து நின்ற அந்தப் பெட்டிகள் இனி நினைவுகளில் மட்டுமே இருக்கும். நாளையிலிருந்து (ஜனவரி 1, 2026), டென்மார்க்கில் கடிதங்களை விநியோகிக்கும் பொறுப்பை ‘டாவோ’ (Dao) போன்ற தனியார் நிறுவனங்களே ஏற்கின்றன. ஆனால், பழைய அரசு சேவையைப் போல ஒவ்வொரு வீட்டிற்கும் கடிதம் வராது; மக்கள் குறிப்பிட்ட மையங்களுக்குச் சென்றுதான் கடிதங்களைப் பெறவோ அனுப்பவோ முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

    டிஜிட்டல் புரட்சியும் MitID-யின் ஆதிக்கமும்: டென்மார்க் இந்த அதிரடி முடிவை எடுக்க முக்கியக் காரணம் அதன் “டிஜிட்டல் மயம்” (Digital by default) என்ற கொள்கையே ஆகும். அங்குள்ள மக்கள் வங்கிச் சேவைகள், வரித் தாக்கல், மருத்துவத் தகவல்கள் மற்றும் அனைத்து அரசு ஆவணங்களையும் MitID (Digital ID) என்ற ஒரே டிஜிட்டல் அடையாள அட்டை மூலமாகவே பெறுகின்றனர். இதனால், காகிதக் கடிதங்களின் பயன்பாடு 2000-ம் ஆண்டிலிருந்து 90% குறைந்துவிட்டது. ஒரு சராசரி டானிஷ் (Danish) குடிமகன் ஆண்டுக்குச் சில கடிதங்களை மட்டுமே பெறுகிறார். காகிதப் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான டாலர்கள் மிச்சமாவதோடு, சுற்றுச்சூழலுக்கும் இது உகந்ததாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், இதன் மறுபக்கம் 1,500-க்கும் மேற்பட்ட அஞ்சல் ஊழியர்கள் இன்றுடன் தங்கள் வேலைகளை இழக்கின்றனர் என்பது வருத்தத்திற்குரிய செய்தியாகும்.

    கனடா போஸ்ட்: நிதி நெருக்கடியும் வேலைநிறுத்தமும்: டென்மார்க்கின் இந்தத் துணிச்சலான முடிவு, கனடாவின் அஞ்சல் துறையான ‘கனடா போஸ்ட்’-ஐ (Canada Post) உற்றுநோக்க வைக்கிறது. கனடா போஸ்ட் தற்போது வரலாற்றிலேயே இல்லாத அளவு நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. 2018 முதல் சுமார் 3 பில்லியன் டாலர்கள் இழப்பைச் சந்தித்துள்ள இந்த நிறுவனம், 2024 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் மட்டும் பெரும் பொருளாதாரச் சரிவை எதிர்கொண்டது. அண்மையில் கனடா போஸ்ட் ஊழியர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டம் (Strike), விநியோகத்தைத் தாமதப்படுத்தியதோடு, மக்கள் மற்றும் வணிகர்களை அமேசான் (Amazon) மற்றும் தனியார் கூரியர் சேவைகளை நோக்கித் திருப்பியுள்ளது. வணிகர்களின் இந்த மாற்றம் கனடா போஸ்டின் வருவாயை மேலும் பாதித்துள்ளது.

    கனடா கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்: டென்மார்க்கைப் போல முழுமையாக டிஜிட்டல் முறைக்கு மாற கனடா இன்னும் தயாராகவில்லை என்பதே நிதர்சனம். டென்மார்க் ஒரு சிறிய, மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள நாடு. ஆனால் கனடா பரந்து விரிந்த தேசம். இங்குள்ள கிராமப்புறங்களுக்கும், வடக்குப் பகுதிகளுக்கும் (Northern Canada) அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு சேர்க்க கனடா போஸ்ட் மட்டுமே ஒரே வழியாக உள்ளது. இருப்பினும், டென்மார்க்கின் இந்த நடவடிக்கை கனடா போஸ்டிற்கு ஒரு முக்கியப் பாடமாகும். தொழில்நுட்ப மாற்றத்தை ஏற்க மறுப்பதும், பழைய முறைகளிலேயே சேவையைத் தொடர்வதும் நீண்ட காலத்திற்குச் சாத்தியப்படாது என்பதை இது உணர்த்துகிறது. கனடா போஸ்ட் தனது கட்டமைப்பை மாற்றியமைக்காவிட்டால், எதிர்காலத்தில் சேவைகளைச் சுருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.

    சமூக மாற்றம் மற்றும் தமிழர்களின் பார்வை: இந்த அஞ்சல் துறை மாற்றங்கள் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் மீதும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு காலத்தில் ஈழத்திலோ அல்லது தமிழகத்திலோ உள்ள உறவுகளுக்கு, நம் கைப்பட எழுதிய கடிதங்களை (Inland Letters) அனுப்பிய அந்த உணர்வுபூர்வமான கலாச்சாரம் இப்போது முடிவுக்கு வருகிறது. பொங்கல் வாழ்த்து அட்டைகள் மற்றும் திருமண அழைப்பிதழ்களைத் தபாலில் அனுப்பும் பழக்கம் குறைந்து, வாட்ஸ்அப் (WhatsApp) செய்திகளாகச் சுருங்கிவிட்டது. மேலும், கனடாவில் தமிழர்கள் நடத்தும் பல சிறு வணிகங்கள் (Small Businesses) தங்கள் விளம்பரப் பிரசுரங்களை (Flyers) வீடுகளுக்கு விநியோகிக்க கனடா போஸ்டையே நம்பியுள்ளன. அஞ்சல் சேவை குறைந்தால், இவர்களின் வணிகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி, டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் பரிச்சயமில்லாத நமது முதியவர்கள், வங்கி மற்றும் அரசுத் தகவல்களுக்கு இன்னும் காகிதக் கடிதங்களையே நம்பியிருப்பதால், இதுபோன்ற முழுமையான டிஜிட்டல் மாற்றம் அவர்களுக்குப் பெரும் சவாலாக அமையக்கூடும்.

    தொடர்புடைய செய்தி

  • உக்ரைனுக்கு 2.5 பில்லியன் டாலர் நிதியுதவி: பிரதமர் மார்க் கார்னியின் அறிவிப்பும், பொருளாதார ரீதியான விமர்சனங்களும்

    உக்ரைனுக்கு 2.5 பில்லியன் டாலர் நிதியுதவி: பிரதமர் மார்க் கார்னியின் அறிவிப்பும், பொருளாதார ரீதியான விமர்சனங்களும்

    ஒட்டாவா, டிசம்பர் 28, 2025: ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்ந்து நீடித்து வரும் சூழலில், உக்ரைனுக்கு மேலதிகமாக 2.5 பில்லியன் கனடிய டாலர்கள் (சுமார் 250 கோடி டாலர்கள்) நிதியுதவி வழங்கப்படும் என கனடியப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney)இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். உக்ரைனின் இறைமையைப் பாதுகாக்கவும், உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும் கனடா இந்த உதவியை வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    நிதியுதவியின் விவரங்கள் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்த 2.5 பில்லியன் டாலர் நிதியானது மூன்று முக்கியத் துறைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது:

    1. இராணுவ உதவி: உக்ரைன் இராணுவத்திற்குத் தேவையான நவீன தற்காப்பு ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள்.
    2. மனிதாபிமான உதவி: போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படைத் தேவைகள், உணவு மற்றும் மருத்துவ வசதிகள்.
    3. உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு: போரினால் சிதைந்த உக்ரைனின் பொருளாதாரத்தைக் கட்டமைத்தல் மற்றும் எரிசக்தி விநியோகத்தைச் சீர்செய்தல்.

    நிதித் துறை மற்றும் பொருளாதார நிபுணத்துவப் பின்னணியைக் கொண்ட பிரதமர் மார்க் கார்னி, “ஐரோப்பாவின் பாதுகாப்பு என்பது கனடாவின் பொருளாதாரப் பாதுகாப்புடனும் தொடர்புடையது. உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்துவது உலகளாவிய சந்தையின் ஸ்திரத்தன்மைக்கு அவசியம்,” என்று தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

    உள்நாட்டில் எதிர்ப்பு: “பொருளாதாரம் தள்ளாடும்போது இது தேவையா?” பிரதமரின் இந்த அறிவிப்பு, கனடிய நாடாளுமன்றத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

    கனடா தற்போது பணவீக்கம் மற்றும் அதிக வட்டி விகிதங்களால் பொருளாதார ரீதியாகச் சவாலான காலகட்டத்தைக் கடந்து வருகிறது. இச்சூழ்நிலையில், முன்னாள் மத்திய வங்கி ஆளுநராகவும் இருந்த தற்போதைய பிரதமர் மார்க் கார்னி, வரி செலுத்தும் மக்களின் பணத்தை (Taxpayers’ Money) உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்கப் பயன்படுத்தாமல், வெளிநாட்டிற்குப் பெருமளவில் வழங்குவது முரண்பாடாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

    “கனடியர்கள் வீட்டு வாடகை மற்றும் மளிகைச் செலவுகளைச் சமாளிக்கத் திணறும் வேளையில், 2.5 பில்லியன் டாலர் என்பது மிகப்பெரிய தொகை,” என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    அரசியல் மற்றும் இராஜதந்திரப் பார்வை சர்வதேச நிதியியல் துறையில் அனுபவம் வாய்ந்த மார்க் கார்னி, இந்த உதவியை ஒரு நீண்ட கால முதலீடாகவே பார்க்கிறார். உக்ரைன் விவகாரத்தில் கனடா தனது உறுதியான நிலைப்பாட்டைத் தொடர்வது, நேட்டோ (NATO) மற்றும் ஜி-7 (G7) நாடுகள் மத்தியில் கனடாவின் செல்வாக்கைத் தக்கவைக்க உதவும் என அரசாங்கத் தரப்பு கருதுகிறது.

  • மேற்குக் கரையில் (West Bank) இஸ்ரேலின் புதிய குடியேற்றத் திட்டங்கள்: கனடா, பிரிட்டன் உள்ளிட்ட 14 நாடுகள் கடும் கண்டனம்

    மேற்குக் கரையில் (West Bank) இஸ்ரேலின் புதிய குடியேற்றத் திட்டங்கள்: கனடா, பிரிட்டன் உள்ளிட்ட 14 நாடுகள் கடும் கண்டனம்

    ஒட்டாவா/லண்டன், டிசம்பர் 24, 2025: இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் (Occupied West Bank) புதிதாக 19 யூதக் குடியேற்றங்களை அமைப்பதற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளமைக்கு கனடா, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட 14 முக்கிய உலக நாடுகள் தங்களது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன. இன்று வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையில், இந்த நடவடிக்கை சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும், பிராந்திய அமைதியைச் சீர்குலைப்பதாகவும் அந்நாடுகள் எச்சரித்துள்ளன.

    கூட்டறிக்கையின் முக்கிய அம்சங்கள்: கனடா, பெல்ஜியம், டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, ஜப்பான், மால்டா, நெதர்லாந்து, நோர்வே, ஸ்பெயின் மற்றும் ஐக்கிய இராச்சியம் (UK) ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து வெளியிட்ட இந்த அறிக்கையில், “இஸ்ரேலின் இந்தத் தன்னிச்சையான நடவடிக்கை, ஏற்கனவே பதற்றத்தில் உள்ள சூழலை மேலும் மோசமாக்கும். இது காஸா (Gaza) போர் நிறுத்தத்திற்கான அமைதித் திட்டத்தை (Comprehensive Plan for Gaza) நடைமுறைப்படுத்துவதற்கும், நீண்ட காலப் பிராந்தியப் பாதுகாப்பிற்கும் பெரும் தடையாக அமையும்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    அமைதி முயற்சிகளுக்குப் பின்னடைவு: இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரண்டு தேசங்களும் பாதுகாப்பான எல்லைகளுடன் அருகருகே வாழ்வதற்கான ‘இரு தேசத் தீர்வு’ (Two-State Solution) கொள்கையை இந்தத் தீர்வு குழிதோண்டிப் புதைப்பதாக கனடா மற்றும் அதன் நட்பு நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் 2334-ஐ சுட்டிக்காட்டியுள்ள இந்த நாடுகள், இஸ்ரேல் தனது முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.

    இஸ்ரேலின் நிலைப்பாடு மற்றும் ஸ்மோட்ரிச்சின் அறிவிப்பு: முன்னதாக, இஸ்ரேலின் தீவிர வலதுசாரி நிதியமைச்சரான பெசலெல் ஸ்மோட்ரிச் (Bezalel Smotrich), மேற்குக் கரையில் 19 புதிய குடியேற்றங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார். “பாலஸ்தீன நாடு உருவாவதைத் தடுப்பதே எமது நோக்கம்,” என்று அவர் வெளிப்படையாகக் கூறியிருந்தது சர்வதேச அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அவரது இந்த அறிவிப்பைத் தொடர்ந்தே, கனடா உள்ளிட்ட நாடுகள் இந்த அவசரக் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளன.

    சர்வதேச சட்டப் பார்வை: சர்வதேச சட்டங்களின்படி, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் குடியேற்றங்களை அமைப்பது சட்டவிரோதமானது. இஸ்ரேலின் தற்போதைய அரசாங்கம் பதவியேற்ற பிறகு, மேற்குக் கரையில் குடியேற்றங்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகிறது. கனடா வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தனிப்பட்ட குறிப்பில், “இஸ்ரேலின் இந்த நடவடிக்கை கனடாவின் வெளியுறவுக் கொள்கைக்கு முரணானது மட்டுமல்லாமல், அமைதியை விரும்பும் இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீன மக்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்குகிறது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • டொரொண்டோ மாநகரசபை ஒப்புதல்: 3 மில்லியன் டாலருக்கு அதிகமான வீடுகளுக்கு புதிய ஆடம்பர வரி உயர்வு

    டொரொண்டோ மாநகரசபை ஒப்புதல்: 3 மில்லியன் டாலருக்கு அதிகமான வீடுகளுக்கு புதிய ஆடம்பர வரி உயர்வு

    டொரொண்டோ (Toronto) – டிசம்பர் 17, 2025: டொரொண்டோ மாநகரசபையானது, அதிக மதிப்புள்ள குடியிருப்புச் சொத்துக்கள் மீதான மாநகரசபை காணி உரிமை மாற்றல் வரியை (Municipal Land Transfer Tax – MLTT) உயர்த்துவதற்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. குறிப்பாக, 3 மில்லியன் டாலர்களுக்கு அதிகமான விலையில் விற்கப்படும் வீடுகளை இலக்காகக் கொண்டே இந்த வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. நடுத்தர வர்க்க வீட்டு உரிமையாளர்கள் மீதான வரிச்சுமையை அதிகரிக்காமல், மாநகரத்தின் வருவாயைப் பெருக்குகின்ற மேயர் ஒலிவியா சாவ் (Olivia Chow) அவர்களின் பரந்த பொருளாதாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

    இந்த மாற்றத்தின் மூலம் 2026 ஆம் ஆண்டில் மட்டும் மாநகரசபைக்குச் சுமார் 14 மில்லியன் டாலர் கூடுதல் வருவாய் கிடைக்கும் என நகர அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். எதிர்வரும் ஜனவரி மாதம் நகரின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் (Budget) வெளியிடப்பட்ட பின்னர், புதிய வரி விகிதங்கள் 2026 ஏப்ரல் மாதமளவில் அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 17-7 என்ற வாக்கு வித்தியாசத்தில் இந்தத் தீர்மானம் மாநகரசபையில் நிறைவேற்றப்பட்டது.

    புதிய வரி விகிதங்கள் மற்றும் கணக்கீடுகள்

    புதிய வரி விதிப்பு முறையின்படி, 3 மில்லியன் டாலர்களுக்கு மேல் மதிப்புள்ள வீட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் படிப்படியாக (Progressive Tax) வரி விகிதம் மாறுபடும். அதாவது, 3 மில்லியன் டாலர் வரை பழைய வரி முறையே தொடரும். அதற்கு மேற்பட்ட தொகைக்கு:

    • 3 மில்லியன் டாலர் முதல் 4 மில்லியன் டாலர் வரையிலான பகுதிக்கு 4.4% வரியும்,
    • 4 மில்லியன் முதல் 5 மில்லியன் டாலர் வரையிலான பகுதிக்கு 5.45% வரியும்,
    • 5 மில்லியன் முதல் 10 மில்லியன் டாலர் வரையிலான பகுதிக்கு 6.5% வரியும் விதிக்கப்படும்.
    • மிகவும் அதிகப்படியான 20 மில்லியன் டாலர்களுக்கு மேல் மதிப்புள்ள வீடுகளுக்கு 8.6% வரி விதிக்கப்படும்.

    வாங்குபவர்கள் செலுத்த வேண்டிய கூடுதல் வரியைப் புரிந்துகொள்வதற்குச் சில உதாரணங்களைப் பார்ப்போம். ஏற்கனவே உள்ள வரிகளுக்கு மேலதிகமாக, 3 மில்லியன் டாலர்களுக்கு அதிகமான தொகைக்கு மட்டுமே இந்த புதிய கணக்கீடு பொருந்தும். உதாரணமாக, 3.5 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு வீட்டை வாங்கும் ஒருவர், வரம்புக்கு மேலதிகமாக உள்ள 500,000 டாலருக்கு 22,000 டாலர் கூடுதல் வரியாகச் செலுத்த வேண்டும். இதுவே 5 மில்லியன் டாலர் மதிப்புள்ள வீடாக இருப்பின், வாங்குபவர் மொத்தமாக 98,500 டாலர் கூடுதல் வரியைச் செலுத்த நேரிடும். 10 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆடம்பர வீட்டிற்கு 4 லட்சத்து 23 ஆயிரத்து 500 டாலர்கள் (423,500) வரை கூடுதல் வரி செலுத்த வேண்டியிருக்கும்.

    ஆதரவும் எதிர்ப்பும்

    இந்த வரி உயர்வானது பல மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை வாங்கும் மிகச்சிறியளவிலான மக்களை மட்டுமே பாதிக்கும் என்பதால், இது ஒரு முற்போக்கான நடவடிக்கை என்று மேயர் ஒலிவியா சாவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர். ஆடம்பர சொத்து பரிவர்த்தனைகள் மூலம் ஏற்கனவே ஆண்டுக்குச் சுமார் 138 மில்லியன் டாலர் வருவாய் கிடைப்பதாக மாநகரசபை தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தக் கூடுதல் வருவாயானது நகரின் அத்தியாவசிய சேவைகள், வீட்டுவசதி திட்டங்கள் மற்றும் போக்குவரத்து மேம்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் என்றும், இது சாதாரண மக்களுக்கான வரி உயர்வைத் தவிர்க்க உதவும் என்றும் கூறப்படுகிறது.

    அதேவேளை, டொரொண்டோ பிராந்திய ரியல் எஸ்டேட் சபை (Toronto Regional Real Estate Board) போன்ற அமைப்புகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இத்தகைய வரி உயர்வு, உயர்தர ரியல் எஸ்டேட் சந்தையின் செயல்பாட்டை மேலும் குறைக்கும் என்றும், சந்தையின் போட்டித்தன்மையைப் பாதிக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். நில உரிமை மாற்றல் வரிகள் எப்போதும் நிலையானவை அல்ல என்றும், அவை சந்தை நிலவரத்தைப் பொறுத்து மாறுபடும் என்றும் சில கவுன்சிலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்துக் கருத்து தெரிவித்த ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் (Doug Ford), மாகாண அரசு இதில் தலையிடாது என்றும், வாக்காளர்கள் அடுத்தத் தேர்தலில் இது குறித்துத் தீர்ப்பளிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

    அடுத்தக்கட்ட நடவடிக்கைகள்

    இறுதியாக, இந்த வரி மாற்றங்களைத் தொடர்ந்து மாநகரசபை சில முக்கிய ஆய்வுகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்குச் சாத்தியமான நிவாரணங்களை (Relief measures) வழங்குவது குறித்து ஆய்வு செய்தல், விற்பனை வரியில் (HST) ஒரு பங்கை கோருதல் போன்ற நிலையான வருவாய் வழிகளைக் கண்டறிதல் மற்றும் நீண்ட கால அடிப்படையில் காணி உரிமை மாற்றல் வரியை மட்டுமே நம்பியிருப்பதைக் குறைப்பதற்கான மாற்று வழிகளை ஆராய்தல் ஆகியவை இதில் அடங்கும்.

  • இஸ்ரேல்: கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்குக் கரைக்குள் நுழையத் தடை – “பாதுகாப்பு அச்சுறுத்தல்” எனக் காரணம் காட்டி திருப்பி அனுப்பப்பட்டனர்

    இஸ்ரேல்: கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்குக் கரைக்குள் நுழையத் தடை – “பாதுகாப்பு அச்சுறுத்தல்” எனக் காரணம் காட்டி திருப்பி அனுப்பப்பட்டனர்

    டிசம்பர் 16, 2025 (செவ்வாய்க்கிழமை): இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் உள்ள மேற்குக் கரைப் (West Bank) பகுதிக்குச் செல்ல முயன்ற கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MPs) அடங்கிய உயர்மட்டக் குழுவை இஸ்ரேலிய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (இன்று) தடுத்து நிறுத்தியுள்ளனர். கனடிய நாடாளுமன்றத்தின் ஆறு உறுப்பினர்கள் அடங்கிய இந்தத் தூதுக்குழுவை, “பொதுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்” (Public safety threats) எனக் காரணம் காட்டி இஸ்ரேல் எல்லைக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் திருப்பி அனுப்பிய சம்பவம் கனடிய அரசியல் வட்டாரத்திலும், புலம்பெயர் சமூகங்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஜோர்டானில் இருந்து மேற்குக் கரைக்குச் செல்லும் ‘ஆலன்பி பாலம்’ (Allenby Bridge) எல்லைக் கடவையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தத் தூதுக்குழுவில் கனடிய ஆளும் லிபரல் கட்சியைச் சேர்ந்த ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிர்க்கட்சியான என்.டி.பி (NDP) கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினரும் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் அனைவரும் “தி கனடியன் முஸ்லிம் வோட்” (The Canadian-Muslim Vote) என்ற அமைப்பின் ஏற்பாட்டில், மேற்குக் கரையில் நிலவும் மனித உரிமை நிலவரங்களை நேரில் ஆராய்வதற்காகச் சென்ற ‘உண்மை அறியும் குழுவினர்’ (Fact-finding mission) ஆவர்.

    எல்லைப் பகுதியில் நிகழ்ந்த மோதல் மற்றும் குற்றச்சாட்டுகள்

    இந்தச் சம்பவத்தின் போது, லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான இக்ரா காலித் (Iqra Khalid), தன்னை இஸ்ரேலிய எல்லைப் பாதுகாப்புப் படையினர் அநாகரீகமாக நடத்தியதாகவும், தன்னை உடல்ரீதியாகத் தாக்கித் தள்ளியதாகவும் (shoved) குற்றம் சாட்டியுள்ளார். எல்லைப் பகுதியில் பல மணிநேரம் காக்க வைக்கப்பட்ட பின்னர், இவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் இராஜதந்திர கடவுச்சீட்டுகளை (Diplomatic Passports) பயன்படுத்திய போதிலும், அவர்களைச் சாதாரண சுற்றுலாப் பயணிகள் போலவோ அல்லது சந்தேக நபர்கள் போலவோ நடத்தியது தூதுக்குழுவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    தடைக்கான காரணம் என்ன?

    இந்தத் தடையை நியாயப்படுத்தும் வகையில் இஸ்ரேலிய அரசாங்கம் வெளியிட்ட தகவலில், இந்தக் குழுவை ஏற்பாடு செய்த அமைப்புக்கும், இஸ்ரேலால் ‘பயங்கரவாத அமைப்பு’ எனப் பட்டியலிடப்பட்ட இஸ்லாமிக் ரிலீஃப் வேர்ல்ட்வைட் (Islamic Relief Worldwide) என்ற அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறியுள்ளது. இதன் காரணமாகவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட முழுக்குழுவையும் “பாதுகாப்பு அச்சுறுத்தலாக” கருதி அனுமதி மறுத்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை கனடிய எம்பிக்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் முற்றாக மறுத்துள்ளனர். அவர்கள் தாங்கள் ஒரு மனிதாபிமான நோக்கத்துடனேயே அங்கு சென்றதாகத் தெரிவித்துள்ளனர்.

    பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்

    இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் விபரம் பின்வருமாறு:

    • சமீர் சுபேரி (Sameer Zuberi – Liberal)
    • இக்ரா காலித் (Iqra Khalid – Liberal)
    • பாரிஸ் அல்-சூத் (Fares Al-Soud – Liberal)
    • அஸ்லம் ரானா (Aslam Rana – Liberal)
    • குர்பக்ஸ் சைனி (Gurbux Saini – Liberal)
    • ஜென்னி குவான் (Jenny Kwan – NDP)

    இதில் குறிப்பாக ஜென்னி குவான் (Jenny Kwan) கனடியத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர் விவகாரங்களுக்கும் நீண்டகாலமாக குரல் கொடுத்து வரும் ஒரு முக்கிய அரசியல்வாதி என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இச்சம்பவம் குறித்துக் கூறுகையில், “தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை இவ்வாறு நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது” எனத் தெரிவித்துள்ளார்.

    கனடிய அரசின் கண்டனம்

    கனடிய வெளியுறவுத் துறை அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand) இந்தச் சம்பவத்திற்கு உடனடியாகக் கண்டனம் தெரிவித்துள்ளார். கனடியப் பிரஜைகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் எல்லையில் நடத்தப்பட்ட விதம் குறித்து கனடா தனது கடும் ஆட்சேபனையை இஸ்ரேலிடம் பதிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கனடா ஏற்கனவே பாலஸ்தீன விவகாரத்தில் ஒரு நிலையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க முயலும் இவ்வேளையில், இந்தச் சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தக்கூடும்.

    தமிழர் பார்வை

    ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை, அரசியல் ரீதியான பயணங்கள் அல்லது ‘உண்மை அறியும் குழுக்கள்’ (Fact-finding missions) முடக்கப்படுவது புதிய விடயமல்ல. போர்க்காலங்களிலும் அதற்குப் பின்னரும் இலங்கைத் தீவின் வடக்கு-கிழக்கு பகுதிகளுக்குச் செல்ல முயன்ற பல சர்வதேசக் குழுக்கள் மற்றும் ஐ.நா பிரதிநிதிகள் இதுபோன்று தடுக்கப்பட்ட வரலாற்றை நாம் அறிவோம். இன்று ஒரு மேற்கத்திய வல்லரசு நாட்டின் (கனடா) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே “பாதுகாப்பு அச்சுறுத்தல்” என்ற முத்திரை குத்தப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது, சர்வதேச அரசியலில் அரசுகள் தங்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உண்மைகள் வெளிவருதைத் தடுக்க எத்தகைய நடவடிக்கைகளையும் எடுக்கும் என்பதையே காட்டுகிறது.

  • இலங்கையில் பரவும் புதிய வகை சிகுன்குனியா (Chikungunya) வைரஸ்

    இலங்கையில் பரவும் புதிய வகை சிகுன்குனியா (Chikungunya) வைரஸ்

    (கொழும்பு, டிசம்பர் 13, 2025) – இலங்கையில் தற்போது வேகமாகப் பரவி வரும் சிகுன்குனியா (Chikungunya) காய்ச்சலானது, இதுவரை அடையாளம் காணப்படாத புதிய மரபணு மாற்றத்தைக் (Genetic Mutation) கொண்டிருப்பதாகச் சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். டிசம்பர் மாத விடுமுறைக்காக வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு உலகலாவிய சுகாதார அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளன.

    இலங்கையின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (Medical Research Institute – MRI) மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் ஒவ்வாமைப் பிரிவு ஆகியவை இணைந்து மேற்கொண்ட ஆய்வில் இந்தத் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது பரவி வரும் வைரஸானது ‘கிழக்கு மத்திய தென்னாப்பிரிக்கா’ (East Central South African – ECSA) வகையைச் சார்ந்தது எனவும், இதில் E1:K211E மற்றும் E2:V264A எனப்படும் புதிய மரபணு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த மாற்றமானது, வைரஸை ஏடிஸ் (Aedes) வகை நுளம்புகள் மூலம் மனிதர்களுக்கு மிக வேகமாகப் பரவச் செய்யும் திறனை அதிகரித்துள்ளது.

    குறிப்பாகக் கொழும்பு, கம்பஹா, கண்டி மற்றும் கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் இந்தக் காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் கடுமையான மூட்டு வலி (Joint Pain), அதிக காய்ச்சல், உடல் சோர்வு மற்றும் தோல் அரிப்பு போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன. பல சந்தர்ப்பங்களில் இது டெங்கு காய்ச்சலாகத் தவறாகக் கணிக்கப்படுவதாகவும், ஆனால் மூட்டு வலி நீண்ட நாட்களுக்கு நீடித்து இருப்பது இதன் முக்கிய அறிகுறி எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் வயதானவர்கள் இந்தத் தொற்றினால் அதிகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

    தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் தைப் பொங்கல் விடுமுறைக்காக கனடா, லண்டன், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலிருந்து ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் தாயகம் திரும்பத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவின் நோயக்கட்டுப்பாட்டு மையம் (CDC) மற்றும் கனேடிய சுகாதாரத் துறை ஆகியவை இலங்கைக்கான பயண எச்சரிக்கையை விடுத்துள்ளன. குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள் இலங்கைக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அல்லது மருத்துவ ஆலோசனை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கனடா மற்றும் அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்ட சிகுன்குனியா தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது ஒரு சிறந்த தற்காப்பு நடவடிக்கையாகப் பரிந்துரைக்கப்படுகிறது.

    இலங்கைச் சுகாதார அமைச்சு, பாடசாலைகள் மற்றும் பொது இடங்களைச் சுத்தமாக வைத்திருக்குமாறும், நுளம்பு பெருகும் இடங்களை அழிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. தாயகம் செல்லும் தமிழர்கள் நுளம்பு கடியில் இருந்து தப்பிக் கொள்ளும் வகையிலான ஆடைகளை அணிவதுடன் (Long sleeves), நுளம்பு விரட்டிகளைப் (Repellents) பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். காய்ச்சல் அல்லது மூட்டு வலி ஏற்பட்டால் உடனடியாக அரச மருத்துவமனைகளை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.