April 14, 2026

ஈரானின் எரிசக்தி மையங்களை குறிவைக்கும் இஸ்ரேல்: ட்ரம்ப் விதித்த 48 மணிநேர கெடுவிரைவில் முடிவடையவுள்ளது

ஏப்ரல் 04, 2026: மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இரானின் மிக முக்கியமான எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளைத் தகர்க்க இஸ்ரேல் தனது இலக்குகளைத் தயார் நிலையில் வைத்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) விதித்த ஏப்ரல் 6-ஆம் தேதி கெடு முடிவடைய இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில், இந்த அதிரடித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

தகர்க்கப்பட காத்திருக்கும் இலக்குகள்

ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறக்க இரானுக்கு அமெரிக்கா விதித்த கெடு இன்னும் 48 மணிநேரத்தில் முடிவடைகிறது. இந்நிலையில், இரானின் மின்சாரக் கட்டமைப்பு மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகள் மீது தாக்குதல் நடத்தினால், அந்த நாட்டின் போர் வலிமையை முடக்க முடியும் என இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரிகள் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வைநெட் நியூஸ் (Ynetnews) செய்தி நிறுவனத்திடம் பேசிய இஸ்ரேலிய அதிகாரி ஒருவர், “உள்கட்டமைப்பு வசதிகள் மீதான தாக்குதலை ட்ரம்ப் உறுதிப்படுத்தினால், நாங்கள் முழு வீச்சில் களமிறங்குவோம். அதற்கான இலக்குகள் ஏற்கனவே துல்லியமாகத் தீர்மானிக்கப்பட்டுவிட்டன,” எனத் தெரிவித்தார்.

நெதன்யாகுவின் எச்சரிக்கை

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தனது அமைச்சரவைக் கூட்டத்தில் பேசுகையில், திட்டமிடப்பட்டுள்ள தாக்குதல்கள் “எதிரி நாட்டின் எரிசக்தித் திறனைச் சிதைப்பது அவர்களை வேரோடு உலுக்கும்,” என்று சூசகமாகத் தெரிவித்தார். ஏற்கனவே நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்கள் மூலம் இரானின் 70 சதவீத எஃகு உற்பத்தியை இஸ்ரேல் முடக்கியுள்ளதாகவும், இதன் மூலம் புரட்சிகர பாதுகாப்புப் படையினரின் (Revolutionary Guard) ஆயுதத் தயாரிப்புத் திறன் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ட்ரம்ப்பின் ’48 மணிநேர’ இறுதி எச்சரிக்கை

சனிக்கிழமை அன்று தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), இரானுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்:

“ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள் அல்லது ஹார்முஸ் நீரிணையைத் திறந்துவிடுங்கள் என நான் இரானுக்கு அளித்த 10 நாள் அவகாசத்தை நினைவில் கொள்ளுங்கள். நேரம் முடிந்து கொண்டிருக்கிறது — இன்னும் 48 மணிநேரம் தான், அதற்குப் பிறகு அவர்கள் மீது நரகம் வந்து இறங்கும் (all Hell will reign down on them).”

கடந்த மார்ச் 25-ஆம் தேதி பேச்சுவார்த்தைகளுக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தாக்குதல் நடவடிக்கைகள், தற்போது மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளன.


தொடரும் தாக்குதல்கள் மற்றும் பதிலடி

ஏற்கனவே குசெஸ்தான் (Khuzestan) மாகாணத்தில் உள்ள மாஷாஹர் சிறப்பு பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தின் (Mahshahr Special Petrochemical Zone) மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக இரான் குற்றம் சாட்டியுள்ளது. இதில் ஐந்து தொழிலாளர்கள் காயமடைந்ததாகத் துணை ஆளுநர் வலியொல்லா ஹயாதி (Valiollah Hayati) தெரிவித்துள்ளார். மேலும், புஷெர் (Bushehr) அணுசக்தி நிலையத்திற்கு அருகிலும் வான்வழித் தாக்குதல்கள் நடந்ததாக என்.பி.ஆர் (NPR) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

விரிவடையும் போர்

பிப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்தப் போர், தற்போது ஆறாவது வாரத்தை எட்டியுள்ளது. ஆரம்பத்தில் ராணுவத் தளங்களை மட்டுமே குறிவைத்த இந்தத் தாக்குதல், தற்போது பாலங்கள், மருந்து ஆலைகள் மற்றும் எரிசக்தி மையங்கள் என விரிவடைந்துள்ளது. இதற்குப் பதிலடியாக இரான் தனது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் வளைகுடா நாடுகளில் தாக்குதல் நடத்தி வருவதோடு, ஹார்முஸ் நீரிணையையும் மூடியுள்ளது.

இது குறித்து இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவிடுகையில், பாகிஸ்தான் (Pakistan) முன்னெடுக்கும் அமைதி முயற்சிகளுக்குத் தாங்கள் தயார் என்றும், ஆனால் ட்ரம்ப்பின் மிரட்டலுக்குப் பணிய மாட்டோம் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப்பின் கெடு முடிய இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியம் ஒரு மிகப்பெரிய போரை எதிர்நோக்கி அச்சத்துடன் காத்துக் கொண்டிருக்கிறது.

இதே நேரம், ஈரானின் விமான எதிர்ப்புத் தரக்குதலின் போது சுட்டு வீழ்த்ப்பட்ட விமானத்தின் விமானியை அமெரிக்கா ஒரு புறமும். ஈரான் இன்னொலுரு புறமும் தேடிக்கொண்டிருக்கின்றன.

மேலதிக செய்திகள்