April 22, 2026

அமெரிக்க – ஈரான் போர்: தற்காலிக போர்நிறுத்தத்தை நீடித்தார் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

வாஷிங்டன் | ஏப்ரல் 21, 2026: மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மேலும் சில நாட்களுக்கு நீடிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று அறிவித்துள்ளார். ஈரானிய அரசாங்கம் ஒரு ஒருமித்த அமைதித் திட்டத்தை முன்வைக்கும் வரை இந்த கால அவகாசம் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, 14 நாட்கள் நீடித்த இந்த போர்நிறுத்தம் நாளை புதன்கிழமையுடன் முடிவடைய இருந்த நிலையில், கடைசி நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் Shehbaz Sharif மற்றும் ராணுவத் தளபதி Asim Munir ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த முடிவை எடுத்துள்ளதாக தனது ‘Truth Social’ தளத்தில் டொனால்ட் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார். ஈரானியத் தலைமை தற்போது பிளவுபட்டுள்ளதாகவும், அவர்கள் ஒரு தெளிவான முடிவுக்கு வர அவகாசம் தேவைப்படுவதாகவும் பாகிஸ்தான் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று இந்த போர்நிறுத்தம் நீடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஈரான் மீதான கடல்சார் முற்றுகை (Naval Blockade) தொடர்ந்து நீடிக்கும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ஈரானியத் துறைமுகங்களைச் சூழ்ந்துள்ள அமெரிக்கக் கடற்படை, ஈரான் புதிய திட்டத்தைச் சமர்ப்பிக்கும் வரை தனது முற்றுகையைத் தொடரும் என்று அதிபர் தெரிவித்துள்ளார். ஒருவேளை பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், ஈரானின் முக்கிய இலக்குகள் மீது அமெரிக்க படைகள்; குண்டுமழை பொழியும் என்று மீண்டும் ஒருமுறை கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். இது போர்நிறுத்தம் என்பது அமைதிக்கான வாய்ப்பா அல்லது அடுத்தக்கட்ட தாக்குதலுக்கான தயாரிப்பா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இதற்கிடையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில்நடைபெறவிருந்த இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் தற்காலிகமாகத் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. அமெரிக்கத் துணை அதிபர் J.D. Vance இதற்காகப் பாகிஸ்தான் செல்லவிருந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஈரான் தனது தரப்புப் பேச்சுவார்த்தையாளர்கள் இன்னும் தயாராகவில்லை என்று தெரிவித்துள்ளதால், ராஜதந்திரரீதியிலான நகர்வுகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் Mohammad Bagher Ghalibaf தரப்பிலிருந்து வந்த தகவல்கள், அமெரிக்காவின் இந்த காலநீடிப்பு ஒரு ‘தந்திரம்’ என்று விமர்சித்துள்ளன.

மத்திய கிழக்கில் நீடிக்கும் இந்த போர்ச் சூழல் உலகப் பொருளாதாரத்தில், குறிப்பாக எரிபொருள் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் விநியோகம் தடைபடலாம் என்ற அச்சத்தில் பல பன்னாட்டு விமான நிறுவனங்கள் தங்களது சேவைகளைக் குறைத்து வருகின்றன. ஈரான் தனது அண்டை நாடுகள் அமெரிக்காவுக்குத் தளம் கொடுத்தால், வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தியே முடங்கும் என்று பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.

டொனால்ட் ட்ரம்பின் இந்தத் திடீர் போர்நிறுத்த நீடிப்பு, ஆசியப் பிராந்தியத்தில் ஒரு தற்காலிக அமைதியைத் தந்தாலும், நிரந்தரத் தீர்வு எட்டப்படுமா என்பது ஈரானின் அடுத்தக்கட்ட நகர்விலேயே தங்கியுள்ளது. ஈரானின் உள்நாட்டு அரசியல் குழப்பங்கள் மற்றும் அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும் அந்நாடு எத்தகைய ‘ஒருங்கிணைந்த திட்டத்தை’ முன்வைக்கும் என்பதே இப்போது சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது

மேலதிக செய்திகள்