February 19, 2026

இலங்கையின் கட்டுமானத் துறையில் 20,000 ஊழியர்களுக்குத் தட்டுப்பாடு: இந்தியா, பங்களாதேஷில் இருந்து தொழிலாளர்களை இறக்குமதி செய்ய அரசு அனுமதி

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மெல்ல மீண்டு வரும் நிலையில், நாட்டின் கட்டுமானத் துறையானது பாரிய ஆளணிப் பற்றாக்குறையை (Labor Shortage) எதிர்கொண்டுள்ளது. 2026 ஆம் ஆண்டில் மட்டும் இத்துறையில் சுமார் 20,000 ஊழியர்களுக்கான வெற்றிடங்கள் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், நிலைமையைச் சமாளிக்க வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்த முக்கிய கட்டுமான நிறுவனங்கள் அரசிடம் அனுமதி கோரியுள்ளன.

கட்டுமானத் துறையின் தற்போதைய நிலை 

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் செயலாளர் குமுது லால் போகஹவத்தை கொழும்பில் ஊடகங்களுக்குத் தெரிவித்த தகவலின்படி, தற்போது கட்டுமானத் துறையில் உடனடித் தேவையாக 10,000 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அண்மையில் வீசிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், கட்டுமானப் பணிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால், இந்த ஆண்டு இறுதிக்குள் பற்றாக்குறை 20,000 ஆக உயரும் அபாயம் உள்ளது.

ஏன் இந்தத் திடீர் தட்டுப்பாடு? 

இலங்கையின் பொருளாதாரச் வீழ்ச்சிக்குப் பின்னர் ஏற்பட்ட நிபுணர்களின் வெளியேற்றம் இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. “ஆண்டுதோறும் சுமார் 1,400 பொறியாளர்கள் படித்து வெளியேறினாலும், அவர்களில் மிகச்ச் சிலரே நாட்டில் தங்குகின்றனர். பெரும்பாலனவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுகிறார்கள்” என அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். பொறியாளர்கள் மட்டுமல்லாது, கொத்தனார்கள், கம்பி வளைப்பவர்கள் போன்ற திறன்சார் தொழிலாளர்களுக்கும் (Skilled Tradesmen) பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.

வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வருகை 

உள்ளூர் ஆளணியைக் கொண்டு இந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியாத நிலையில், முன்னணி கட்டுமான நிறுவனங்கள் சுமார் 7,500 வெளிநாட்டுத் தொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்துவர அனுமதி கோரியுள்ளன. ஏற்கனவே இந்தியா, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து பல தொழிலாளர்கள் இலங்கையின் கட்டுமானத் தளங்களில் பணிபுரிந்து வருகின்றனர். “சட்டரீதியாக இவர்களின் வருகையைத் தடுக்க நாங்கள் விரும்பவில்லை” என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் இளைஞர்களின் மனநிலை 

கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அதிகளவில் இருந்தபோதிலும், சமூக அந்தஸ்து மற்றும் கௌரவம் கருதி அவர்கள் கட்டுமானத் துறைக்கு வரத் தயங்குவதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். “வேலையில்லாத இளைஞர்கள் பலர் உள்ளனர், மறுபுறம் கட்டுமானத் துறையில் வேலைகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் இவை இரண்டும் இணையாத ஒரு முரண்பாடு நிலவுகிறது” என்று போகஹவத்தை குறிப்பிட்டார். இதனை மாற்றியமைக்க, தேசிய தொழில் தகுதி (NVQ) சான்றிதழ்களை வழங்கி, இத்தொழிலுக்கான சமூக அங்கீகாரத்தை உயர்த்தவும், உள்ளூர் இளைஞர்களுக்குப் போதிய பயிற்சியளித்து எதிர்காலத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குப் பதிலாக அவர்களைப் பணியிலமர்த்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.

பொருளாதாரப் பின்னணி 

2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதாரச் சரிவின்போது, வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டதாலும், கட்டுமானப் பொருட்களின் விலையேற்றத்தாலும் இத்துறை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. பல கட்டடப் பணிகள் பாதியில் கைவிடப்பட்டன, தொழிலாளர்கள் கிராமங்களுக்குத் திரும்பினர் அல்லது வெளிநாடுகளுக்குச் சென்றனர். தற்போது பொருளாதாரம் சற்றே ஸ்திரமடைந்து வருவதால் பணிகள் மீண்டும் சூடுபிடித்துள்ளன, ஆனால் அதற்கேற்ற பணியாளர்கள் இல்லாதது இத்துறையின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக மாறியுள்ளது.

மேலதிக செய்திகள்