January 15, 2026

சிங்கங்களும் பன்றிகளும் அறுவான்களும் குறுக்கால போவான்களும்?

கடந்த 15 ஆண்டுகளில் எல்லா ஜனாதிபதித் தேர்தல்களின் போதும் தமிழ் மக்கள் யாரைத் தோற்கடிக்க வேண்டும் என்று தீர்மானித்து, திரண்டு வாக்களித்தார்கள். அங்கே ஒரு திரட்சி இருந்தது. அதேசமயம் ஏனைய தேர்தல்களில் குறிப்பாக, நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களைத் திரட்ட முடியவில்லை. தமிழ் மக்கள் சிதறி வாக்களித்தார்கள். இம் முறை தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் உடைவானது அந்தச் சிதறலை மேலும் அதிகப்படுத்துமா?


நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்திய பொழுது தேசமாகத் திரள்வோம் என்று கூறப்பட்டது. ஆனால் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிகளாகச் சிதறுவோம் அல்லது குழுக்களாகச் சிதறுவோம் அல்லது கட்சிக்குள் அணிகளாகச் சிதறுவோம் அல்லது சுயேச்சைகளாகச் சிதறுவோம் என்ற கோஷத்தை முன்வைக்க வேண்டி வருமா?


நடப்பு நிலைமைகளைத் தொகுத்துப் பார்த்தால் தமிழ்த்தேசிய அரசியல் களம் அப்படித்தான் காட்சி தருகின்றது. தேசியவாத அரசியல் என்பது மக்களைத் திரளாகக் கூட்டிக்கட்டுவது. மக்களை கூட்டுணர்வின் அடிப்படையில் ஒரு தேசமாகத் திரட்டுவது. ஆனால் கட்சிகள் மத்தியில் கூட்டுணர்வு இருந்தால்தான் அவை மக்களைக் கூட்டிக் கட்ட முடியும். கட்சிகள் மத்தியில் அது இல்லையென்றால் எப்படி மக்களைத்
தேசமாகத் திரட்டுவது?


உள்ளதில் பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சி ஒரு தனிநபரின் கருவியாக மாறி அந்தத் தனிநபரை வெல்ல வைப்பதற்காக அவருடைய விசுவாசிகளை வேட்பாளர் பட்டியலில் சேர்த்திருக்கின்றது. அந்த விசுவாசிகள் தமக்கு விசுவாசமான தலைவருக்காக வாக்குகளை சேகரித்துக் கொடுப்பார்கள். ஒரு மூத்த கட்சி யானது வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பொழுது என்னென்ன அளவு கோல்களை வைத்து அதைச் செய்திருக்க வேண்டும் ?


ஆனால் அதைக் கேள்வி கேட்க வேண்டிய மூத்தவர்களும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கட்சிக்குள் தலைவராக தெரிவு செய்யப்பட்ட சிறீதரனும் என்ன செய்கிறார்கள்? சிறீதரனுடைய ஆதரவாளர்கள் ரஜினிகாந்தின் படத்தில் வரும் ஒரு பஞ் டயலாக்கை பரவலாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். சிங்கம் எப்பொழுதும் சிங்கிளாகத் தான் வரும். பன்றிகள்தான் கும்பலாக வரும் என்ற வசனம் அது.

அதாவது தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பெரிய கட்சி சிங்கங்களும் பன்றிகளுமாக சிவஞானம் கூறுவது போல அறுவான்களும் குறுக்கால போவான்களுமாக சிதறிப் போகிறது என்று பொருள்.அ து தேசியக் கூட்டுணர்வோடு ஒரு திரட்சியாக இல்லை.

வேட்பாளர் பட்டியல் வெளிவந்ததிலிருந்து கட்சிக்குள் மகளிர் அணியும் தவறாசா அணியும் ஏனைய அணிகளும் நொதிக்கத் தொடங்கி விட்டன. தவராசா அணி சுயேச்சையாகப் போட்டியிடுகின்றது. இவ்வாறு தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் ©சல்கள் ஏற்கனவே தூர்ந்து போன கட்சியை மேலும் சிதைக்கக்கூடும். அவ்வாறு தமிழரசுக் கட்சி பலவீனமடையும் பொழுது அதனால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு வேறு கட்சிகள் அல்லது வேறு கூட்டுக்கள் உண்டா?


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது தேசியவாத அரசியல் குறித்த பொருத்தமான நடைமுறைச் சாத்தியமான தரிசனங்களைக் கொண்டிராத ஒரு கட்சி. தங்களைத் தியாகிகள் ஆகவும் புனிதர்களாகவும் காட்டுவதற்காக மற்ற வர்களுக்குத் துரோகிப் பட்டம் சூட்டும் ஒரு கட்சி. தன்னை புத்திசாலிகள், கொள்கைவாதிகளின் கட்சியாகக் காட்டி க்கொள்ளும் ஒரு கட்சி.

தேசம் என்பது புனிதர்கள், தியாகிகள், கொள்கைவாதிகளை மட்டும் கொண்டதல்ல. திருடர்கள், அயோக்கியர்கள் சமானியர்கள் என்று எல்லா வகைப்பட்டவர்களினதும் திரட்சி தான் தேசம். முன்னணியின் அரசியல் பெருந்திரட்சிக்கு உரியதல்ல. அதனால் முதன்மைக் கட்சியாக மேலுயர முன்னணியால் இதுவரை முடியவில்லை.

அரசியல் என்பது சாத்தியக்கூறுகளின் கலை. சாத்தியமானவற்றுக் கூடாகத்தான் கொள்கையைப் பரவலாக்கலாம், மக்கள் மயப்படுத்தலாம், அதை ஒரு திரண்ட அரசியல் சக்தியாக மாற்றலாம். தூய தங்கத்தை வைத்துக் கொண்டு ஆபரணம் செய்ய முடியாது. அதில் செம்பு கலக்க வேண்டும். செம்பைக் கலக்காவிட்டால் தங்கம் பிரயோக நிலைக்கு வராது. அப்படித்தான் நடைமுறைச் சாத்தியமாகச் சிந்திக்கா விட்டால் கொள்கை மக்கள் மயப்படாது. இது தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் உள்ள பிரதான பலவீனம். அவர்களால் தேசத்தைத் திரட்ட முடியாது. எனவே தமிழரசுக் கட்சி சிதையும் போது ஏற்படும் வெற்றிடத்தில் ஒரு பிரதான நீரோட்டக் கட்சியாக மாறி ஆசனங்களைக் கைப்பற்றத் தேவையான அரசியல் தரிசனமும் நெகிழ்வும் முன்னணியிடம் இல்லை.


அடுத்தது குத்துவிளக்குக் கூட்டணி. அந்த கூட்டணி ஜனாதிபதித் தேர்தலின் பின் சங்குச் சின்னத்தை கைப்பற்றியதன் மூலம் சங்குக் கூட்டணியாக மாறியிருக்கிறது. அங்கேயே சர்ச்சைகள் உண்டு. ஒரு கூட்டு வெற்றியை அதன் பங்காளிகளில் ஒரு பகுதி மட்டும் சுவீகரிக்கப் பார்க்கின்றது. சங்கு இப்பொழுது தமிழ்த் தேசிய பொதுக்கூட்டமைப்பின் சின்னம் அல்ல. ஏனெனில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு இப்பொழுது இல்லை. அதற்குள் இருந்த தமிழ் மக்கள் பொதுச்சபை தேர்தலில் ஈடுபடவில்லை. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கமும் தமிழ் மக்கள் கூட்டணியும் அக்கூட்டுக்குள் இல்லை. எனவே சங்கு பொதுக் கட்டமைப்பின் சின்னமல்ல.

சங்குக்கு விழுந்த 2 லட்சத்து 26 ஆயிரம் வாக்குகளும் சங்குச் சின்னத்தை எடுத்து வைத்திருக்கும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு கிடைக்குமா? சங்குக்கு விழுந்த வாக்குகள் தேசத்திரட்சிக்கு விழுந்த வாக்குகள். அதில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தேசத் திரட்சி என்ற அடிப்படையில் வாக்களித்திருக்கிறார்கள். அரியநேத்திரன் ஒரு குறியீட்டு வேட்பாளர்.

ஏறக்குறைய ஒரு துறவி போல அவர் தேர்தலில் நின்றார். அவருக்கு வாக்குத் திரட்டுவதற்காக மக்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் துறவிகளைப் போல சம்பளம் வாங்காமல் இரவு பகலாக வேலை செய்தார்கள். அவரை வேட்பாளராக முன்னிறுத்திய பொதுக் கட்டமைப்பைச் சேர்ந்த கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலை நோக்கித் தான் உழைத்தன என்பது எல்லாருக்கும் தெரியும்.

ஆனாலும் பொது வேட்பாளரை நோக்கி அவர்கள் திரட்டிய வாக்குகள் பொதுவானவை. பொதுவான வாக்குகள் இப்பொழுது ஐந்து கட்சிகளின் கூட்டமைப்பாக உள்ள சங்குக் கூட்டணிக்கு மட்டும் கிடைக்குமா? கிடைக்காது. உதாரணமாக, கிளிநொச்சியில் தமிழரசுக் கட்சி சங்குக்காக வேலை செய்தது. அது முழுமையாக வேலை செய்ததா இல்லையா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, அங்கு கிடைத்த வாக்குகளுக்குள் தமிழரசு கட்சியின் வாக்குகளே அதிகம் உண்டு. எனவே சிறீதரனா? சங்கா? என்று வரும் பொழுது சிறீதரனின் ஆதரவாளர்கள் அவருக்குத்தான் வாக்களிப்பார்கள். அப்படித் தான் மட்டக்களப்பிலும் அரியநேத்திரனுக்காக சிறீநேசனும் உட்பட பல மூத்த தமிழரசுக் கட்சிக்காரர்கள் ஒன்றாக நின்று உழைத்தார்கள். தங்களின் ஒருவருக்கு அவர்கள் பொதுவாக வாக்குத் திரட்டினார்கள். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுடைய வாக்குகள் வீட்டுக்குத் தான் விழும். சங்குக்கு அல்ல. அப்படித்தான் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த அருண் தப்பிமுத்து திரட்டிய வாக்குகளும் சங்குக்கு விழாது.


மேலும் யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சரவணபவன், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் உட்பட பலரும் சங்கின் வெற்றிக்காக உழைத்திருக்கிறார்கள். அவர்கள் சங்கு கூட்டணிக்குள் நிற்கவில்லை. மாறாக தவறாசாவின் சுயேட்சைக் குழுவாக களமிறங்குகிறார்கள். அவர்கள் சங்குக்கு திரட்டிய வாக்குகள் இனி அவர்களுடைய சுயேச்சைக் குழுவுக்குத் தான் அதிகமாக விழும். அப்படித்தான் இப்பொழுது யாழ்ப்பாண த்தில் சுயேச்சையாக நிற்கும் தமிழர் சமஉரிமை அமைப்பும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளருக்காக விசுவாசமாக உழைத்தது. அந்த அணி இப்பொழுது சுயேச்சையாகக் கேட்கின்றது. எனவே பொது வேட்பாளருக்காக அவர்கள் சேகரித்த வாக்குகள் அந்த சுயேச்சைக்கு விழுமா அல்லது சங்குக்கு விழுமா? தமிழ் மக்கள் சின்னத்தைப் பார்த்து மயங்குவார்களா?

இது தான் பிரச்சினை. ஒரு சன்னியாசி போல அரியநேத்திரன் தேர்தலில் நின்ற பொழுது தமிழ் மக்கள் கூட்டுணர்வோடு அவருக்கு வாக்களித்தார்கள்.அதே கூட்டுணர்வோடு இப்பொழுது வாக்களிக்க மாட்டார்கள். கட்சி விசுவாசம், தனி நபர் விசுவாசம், பிரதேச
விசுவாசம், ஊர் விசுவாசம் போன்ற பல காரணிகளாலும் வாக்குகள் சிதறடிக்கப்படும் ஆபத்து அதிகமுள்ள ஒரு தேர்தல் இது. மேற்சொன்ன அனைத்து விசுவாசங்களும் தேசியக் கூட்டுணர்வுக்கு விரோதமானவை. பொது வேட்பாளருக்கான தேர்தலில் பிரச்சாரப் பணிகள் தொடங்கிய போது எமக்காக நாம் என்று கூறப்பட்டது. ஆனால் நடக்கவிருக்கும் தேர்தலில் எனக்காக நான் என்பதுதான் நடைமுறையாக உள்ளது.

அடுத்தது, விக்னேஸ்வரனின் கட்சி. அது இப்போதைக்கு பிரதான நீரோட்டக் கட்சியாக பலமாக எழும் என்று நம்பமுடியாத ஒரு கட்சிச் சூழல் தான் காணப்படுகிறது. நடக்கவிருக்கும் தேர்தல் அந்த கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சியைக் காட்டும். தொகுத்துப் பார்த்தல், யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் மட்டும் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சங்குக் கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி, ஜேவிபியின் கூட்டணி, சுயேச்சைக் குழுக்கள் என்று மொத்தம் 44 தரப்புகள் தமிழ் வாக்குகளைக் கேட்கப் போகின்றன. இதில் அனுர அலை எந்த அளவுக்கு வாக்குகளைக் கவரும் என்பதை இப்பொழுது மதிப்பிடுவது கடினம்.

இப்படி ஒரு நிலையை கிழக்கில் அனுமதித்தால், குறிப்பாக திருகோணமலையிலும் அம்பாறையிலும் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும் என்ற அச்சம் அங்குள்ள சிவில் சமூகங்களிடம் உண்டு. திருகோணமலையில் கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர் இது தொடர்பில் தலையிட்டிருக்கிறார். அங்கே போட்டித் தவிர்ப்பு உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டுள்ளது. அதனால் வாக்குகள் சிதறுவது தடுக்கப்பட்டு குறைந்த பட்சம் ஒரு பிரதிநிதித்துவமாவது பாதுகாக்கப்படலாம்.

ஆனால் அம்பாறையில் நிலைமை அவ்வாறில்லை. ஆக மொத்தம் வரும் நாடாளுமன்றத் தேர்தலானது தமிழ் மக்களை வாக்காளர்களாகச் சிதறடிக்கப் போகிறது. சில கிழமைகளுக்கு முன்பு தேசமாகத் திரள்வோம் என்ற கோஷம் ஜனாதிபதித் தேர்தலில் பலமாக ஒலித்தது. ஆனால் துரதிஷ்டவசமாக நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் கட்சிகளாகச் சிதறும் ஆபத்தே அதிகரித்து வருகின்றது.


நண்பர் ஒருவர் பின்வருமாறு கேட்டார் இப்படியே சிதறிப்போனால் சனங்கள் தௌ;ளும் வேண்டாம் நாயும் வேண் டாம் என்று சலிப்படையக் கூடுமா?

கட்டுரைகள்…