மார்ச் 11, 2026
இலங்கையின் தென் கடற்பரப்பில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட ‘IRIS Dena’ என்ற ஈரானியப் போர்க்கப்பலில் பலியான டஜன் கணக்கான மாலுமிகளின் உடல்களை ஈரானிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலில் உயிரிழந்த 104 மாலுமிகளில் 84 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களின் உடல்கள் மிக விரைவில் ஈரானுக்குக் கொண்டு செல்லப்படும் என்றும் அந்நாட்டு இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
சர்வதேச ஊடகமான ‘Al Jazeera’ மற்றும் ஈரானின் ‘Fars’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்த உடல்களைத் தாயகம் கொண்டு வரும் பணிகள் ஈரானிய வெளியுறவு அமைச்சு மற்றும் இலங்கை அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தென் கடற்பரப்பில் கப்பல் மூழ்கியதைத் தொடர்ந்து மீட்கப்பட்ட மாலுமிகளின் உடல்கள், காலி போதனா வைத்தியசாலையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த நடமாடும் குளிரூட்டப்பட்ட அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், காலி பிரதம நீதவான் சமீரா தொடங்கொட (Sameera Dodangoda) செவ்வாய்க்கிழமை அன்று வழங்கிய உத்தரவின் அடிப்படையில், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கொழும்பிலுள்ள ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலி துறைமுகப் பொலிஸார் நீதிமன்றத்தில் முன்வைத்த கோரிக்கையைத் தொடர்ந்தே இந்தச் சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டது. இந்து சமுத்திரத்தில் காலி துறைமுக நகருக்கு அண்மித்த பகுதியில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய இத்தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் 104 மாலுமிகள் கொல்லப்பட்டதோடு, மேலும் பலர் காயமடைந்த நிலையில் இலங்கைக் கடற்படையினரால் மீட்கப்பட்டனர். எவ்வாறாயினும், இந்த விவகாரம் இலங்கையின் உள்நாட்டு அரசியலிலும் விவாதங்களை உருவாக்கியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், உயிரிழந்தவர்களின் உடல்களைப் பாதுகாப்பதற்கும், மீட்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கும் ஏற்படும் பெருமளவிலான செலவுகள் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இந்தியாவுடன் இலங்கை ஜனாதிபதி எவ்வாறான இணக்கப்பாடுகளை எட்டியுள்ளார் என்பது மக்களுக்குத் தெரியாது எனச் சுட்டிக்காட்டிய சேனசிங்க, தேவையற்ற சர்வதேசப் பிரச்சினையில் இலங்கை அரசாங்கம் சிக்கியுள்ளதாகக் குற்றம் சாட்டினார். அத்துடன், மீட்கப்பட்ட மாலுமிகளை அமெரிக்காவும் ஈரானும் தேடி வரும் நிலையில், இந்தச் சிக்கலை இலங்கை எவ்வாறு கையாளப் போகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துள்ள அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, இந்த விவகாரத்தை இலங்கை அரசாங்கம் மனிதாபிமான அடிப்படையிலேயே அணுகுவதாகத் தெரிவித்தார். மாலுமிகளின் உடல்கள் இலங்கையில் இருக்கும் வரை மற்றும் காயமடைந்தவர்கள் எமது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் வரை, அவர்களுக்கான அனைத்துச் செலவுகளையும் மனிதாபிமான அடிப்படையில் இலங்கை அரசாங்கமே ஏற்கும் என அவர் சமூக வலைத்தளம் வாயிலாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.









