February 19, 2026

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக பிரித்தானியத் தமிழர்கள் பாரிய கண்டனப் போராட்டம்

லண்டன்: ஜனவரி 31, 2026: இலங்கையில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் தொடர்ச்சியான அடக்குமுறைகளைக் கண்டித்தும், கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) உடனடியாக நீக்க வலியுறுத்தியும், பிரித்தானியத் தமிழர்கள் லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர். அண்மைக்காலமாக தாயகத்தில் ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் நசுக்கப்படுவதையும், தமிழ் உணர்வாளர்கள் இலக்கு வைக்கப்படுவதையும் சுட்டிக்காட்டி இந்தப் போராட்டம் அமைந்திருந்தது.

இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தன்னிச்சையான கைது நடவடிக்கைகள் மற்றும் அமைதி வழியில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் புலம்பெயர் தமிழ் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, கடந்த மாதம் தையிட்டியில் முன்னெடுக்கப்பட்ட அகிம்சைப் போராட்டத்தில் பங்கேற்ற வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிகழ்வு, தமிழ் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகளிடையே கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் முன்னால் திரண்ட நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கைதுகளை உடனடியாக நிறுத்துமாறு கோஷமிட்டனர். தசாப்த காலங்களாகத் தமிழ் மக்களுக்கு எதிராக அடக்குமுறை ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் இந்தச் சட்டமானது, நீண்டகாலத் தடுத்து வைப்பு, செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தல் மற்றும் மாற்றுக்கருத்துகளைக் குற்றமாக்குதல் போன்ற நடவடிக்கைகளுக்கு வழிவகுப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர். சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான அழுத்தங்களுக்கு மத்தியிலும், இந்தச் சட்டம் இன்னமும் நடைமுறையில் இருப்பது கண்டிக்கத்தக்கது என வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய அமைப்பாளர்கள், ஆயுதப் போர் முடிவுக்கு வந்த பின்னரும் தமிழ் மக்கள் மீதான அரச அடக்குமுறைகள் ஒரு தொடர்ச்சியான வடிவத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தனர். மேலும், தற்போது முன்மொழியப்பட்டுள்ள புதிய “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்” (Protection of the State from Terrorism), பழைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் அதே கொடூரமான அம்சங்களைக் கொண்டிருப்பதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இது தமிழ் மக்களின் உரிமைகளை மேலும் நசுக்கும் ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

லண்டனில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தின் ஊடாக, தாயகத்தில் நிலவும் உண்மை நிலையைச் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வதே தங்களின் நோக்கம் என ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர். குறிப்பாக, ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் மீது கடும் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்றும், தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களை இலக்கு வைப்பதை கொழும்பு நிர்வாகம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

தூதரகத்தின் வாயிலில் பதாகைகளை ஏந்தியவாறு திரண்டிருந்த மக்கள், “பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு”, “தமிழ் மக்களின் உரிமைகளை நசுக்காதே” போன்ற வாசகங்களை உரக்க முழங்கினர். உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் தாயகத்தில் உள்ள தங்களின் உறவுகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுப்பார்கள் என்பதைப் பறைசாற்றும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருந்தது.

மேலதிக செய்திகள்