February 19, 2026

யாழ்ப்பாணத்தில் 17 வயது தமிழ் சிறுவன் பொலிஸாரால் சுட்டுக் கொலை: நீதிகோரி உறவினர்கள் போராட்டம்

யாழ்ப்பாணம், பெப்ரவரி 16, 2026: யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை வீதியில் அமைந்துள்ள அல்லைப்பிட்டிச் சந்தி பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து, 17 வயதுடைய அல்பிநோ அருள் பியூஸ் என்ற தமிழ் சிறுவன் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் (பெப்ரவரி 10, 2026) அதிகாலை வேளையில் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச் சூடு, தமிழ் மக்கள் மீதான பொலிஸ் வன்முறையின் மற்றொரு வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.

வட்டுக்கோட்டை, சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த அருள் பியூஸ், அதிகாலை வேளையில் தொழிலாளர்களை ஏற்றிச் செல்வதற்காக வானொன்றைச் செலுத்திச் சென்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சோதனைச் சாவடியில் வாகனத்தை நிறுத்தவில்லை எனக் கூறி, பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிறுவனின் நெற்றியில் தோட்டா பாய்ந்துள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தக் கொலை தொடர்பாகப் பொலிஸார் தரப்பில் வழங்கப்பட்ட விளக்கங்கள் முரணானவையாக உள்ளன. ஆரம்பத்தில் அச்சிறுவனுக்கு 17 வயது என்று தெரிவித்த பொலிஸார், பின்னர் பொதுமக்களின் கோபத்தைத் திசைதிருப்பும் நோக்கில் அவருக்கு 19 வயது என்று ஊடக அறிக்கைகளை வெளியிட்டனர். எனினும், அருள் பியூஸ் 2008 நவம்பர் 9 ஆம் திகதி பிறந்தவர் என்பதையும், அவர் உயிரிழக்கும் போது அவருக்கு 17 வயது 3 மாதங்கள் மட்டுமே என்பதையும் அவரது குடும்பத்தினர் பிறப்புச் சான்றிதழைச் சமர்ப்பித்து உறுதிப்படுத்தியுள்ளனர்.

அருள் பியூஸின் குடும்பத்தினர் தெரிவித்துள்ள தகவல்கள் மேலும் அதிர்ச்சியளிக்கின்றன. குடும்பத்தின் வறுமை காரணமாகவே அவர் சிறுவயதிலேயே சாரதியாகப் பணிபுரிய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். அவருக்குச் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத போதிலும், பொலிஸாருக்குத் தொடர்ச்சியாக இலஞ்சம் வழங்கியே அவர் தனது தொழிலைச் செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று பொலிஸாருக்கு வழங்குவதற்கு அவரிடம் பணம் இல்லாத காரணத்தினாலேயே அவர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றிருக்கலாம் என்றும், அதற்குப் பதிலாக அவரைத் தலையில் சுட்டுக் கொன்றது எவ்விதத்திலும் நியாயமற்றது என்றும் அவரது பெரியம்மா கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சித்தங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் பெப்ரவரி 12 ஆம் திகதி இறுதிக்கிரியைகள் நடைபெற்றன. அதன் பின்னர், சிறுவனின் உடலை வீதியில் வைத்து உறவினர்களும் பொதுமக்களும் பாரிய போராட்டத்தை முன்னெடுத்தனர். “பொலிஸாரைக் கைது செய்”, “எங்கள் பிள்ளைக்கு நீதி வேண்டும்”, “பொலிஸ் அராஜகம் ஒழியட்டும்” போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தி மக்கள் ஆவேசமாக முழக்கமிட்டனர். போராட்டத்தின் முடிவில் சிறுவனின் உடல் நவாலி இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இலங்கையில் போர் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்த பின்னரும், வடக்கு கிழக்கில் தொடரும் அதீத இராணுவ மயமாக்கல் மற்றும் பொலிஸ் சோதனைச் சாவடிகளின் கெடுபிடிகளே இத்தகைய உயிரிழப்புகளுக்குக் காரணமாகின்றன. 2016 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சுலக்ஷன் மற்றும் கஜன் ஆகியோர் இதே போன்ற காரணத்தைக் கூறி பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதை இச்சம்பவம் நினைவுபடுத்துவதாகத் தமிழ் சிவில் சமூக அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாகப் பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் ஒருதலைப்பட்சமாக அமையக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. குறிப்பாக, போராட்டங்களை முன்னெடுக்க வேண்டாம் எனப் பொலிஸார் தமக்குத் தொலைபேசி ஊடாக மறைமுக அச்சுறுத்தல் விடுத்ததாக உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர். சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இந்த விவகாரத்தில் தலையிட்டு, உரிய விசாரணை நடத்திப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே தற்போது வலுவாக எழுந்துள்ள கோரிக்கையாகும்.

மேலதிக செய்திகள்